சிட்னி: சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 - 3 என்ற கணக்கில் தொடரை இழந்து இருந்தது. அந்த டெஸ்ட் தொடரில் குறிப்பிட்ட ஒரு வீரரை இந்திய அணியில் தேர்வு செய்து இருந்தால் அது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கும் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சுட்டிக் காட்டி இருக்கிறார்.
அந்த முக்கிய வீரர் புஜாரா தான். ஒருவேளை புஜாராவை தேர்வு செய்யாமல் போனாலும் ஹனுமா விகாரி அல்லது அபிமன்யு ஈஸ்வரன் போன்ற டெஸ்ட் போட்டிக்கு ஸ்பெஷலிஸ்ட் வீரர்களை ஆட வைத்திருக்கலாம் எனவும் ராபின் உத்தப்பா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

2024 - 25 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் புஜாராவை அணியில் தேர்வு செய்ய வேண்டும் என கூறியதாகவும், ஆனால் அதை தேர்வு குழுவினர் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் தான், ராபின் உத்தப்பா தனது கருத்தை கூறி இருக்கிறார்.
"ஆஸ்திரேலியாவுக்கு புஜாராவை அழைத்து செல்லாதது மிகப் பெரிய தவறு. புஜாராவை தேர்வு செய்யாமல் போனாலும் அவருக்கு இணையாக ஆடும் ஒருவரை தேர்வு செய்து இருக்கலாம். ஹனுமா விஹாரியை கூட தேர்வு செய்து இருக்கலாம். அவர் இந்த தொடரில் புஜாராவாக மாறி இருப்பார்."
"ஆனால், அபிமன்யு ஈஸ்வரனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் உள்ளூர் தொடர்களில் ஒவ்வொரு ஆண்டும் 1000 ரன்களை குவிக்கிறார். அவரை அணியில் தேர்வு செய்கிறீர்கள் என்றால் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுப்பதாக தவறான நம்பிக்கையை அளிக்காதீர்கள். அவரது முகத்துக்கு நேராக, "நீ சர்வதேச கிரிக்கெட் விளையாட மாட்டாய். உள்ளூர் போட்டிகளில் மட்டும் ரன் குவித்து கொண்டு இரு" என்று சொல்லி விடுங்கள்"
"நிறைய வீரர்கள் இதுபோல அணியில் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். கருண் நாயர் முச்சதம் அடித்ததற்கு பின்னர் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அது அதிர்ச்சிகரமானது." என்றார் ராபின் உத்தப்பா.