மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கொண்ட தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளராக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டிருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. முகமது சமி உள்ளிட்ட வீரர்கள் இருக்கும் நிலையில் ஹர்ஷித் ராணாவை தொடர்ந்து சேர்ப்பது ஏன் என்று தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "ஹர்ஷித் ராணாவை எதற்கு அணியில் தேர்வு செய்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதற்காகவே தேர்வுக்குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று அவர்கள் ஹர்ஷித் ராணாவை தேர்வு செய்ததற்கு பின்னால் என்ன பேசி இருப்பார்கள்."

"என்ன யோசித்து இருப்பார்கள் என்பதை அறிய ஆவலுடன் இருக்கின்றேன். என்னை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விளையாடும் போது பேட்டிங் செய்யத் தெரிந்த வேகப்பந்துவீச்சாளர்கள் மிகவும் முக்கியம். எனக்கு என்னவோ சிலர் ஹர்ஷித் ராணாவால் பேட்டிங் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள்."
"அதனால் தான் ஹர்ஷித் ராணாவை நம்பர் எட்டாவது வீரராக தேர்வு செய்து இருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். ஆனால் அவருடைய பேட்டிங் திறமை பற்றி எனக்கு சுத்தமாக தெரியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இறுதிப்போட்டியில் நிதிஷ் குமாருக்கு எதிராக அவர் வீசிய பந்து ஒன்று அபாரமாக இருந்தது."
"அந்த ஒரு பந்துக்காக தான் தொடர்ந்து ஹர்ஷித் ரானா தேர்வு செய்யப்படுகிறார் என்று நினைக்கின்றேன்.ஆனால் ஹர்ஷித் ராணாவுக்கு நிச்சயம் திறமை இருக்கிறது. அவருக்கு திறமை இல்லாமல் அணியில் இருக்கிறார் என்று சொன்னால் அதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் இது போன்ற தேர்வு என்பது யாரோ ஒருவர் ஹர்ஷித் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்."
"அவரை அருகில் இருந்து பார்த்திருக்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது பலரும் ஜடேஜாவை சிறந்த வீரர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் ஜடேஜாவை என் தேர்வு செய்கிறார்கள் என்று பலரும் கேட்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன் நான் 540 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறேன். ஆனால் ஒரு காலத்தில் என்னையும் ஏன் அணியில் தேர்வு செய்கிறார்கள் என்றும் கேள்வி கேட்டு இருக்கிறார்கள்."
"ஹர்சித் ராணாவிடம் ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது. ஆனால் அவர் கண்டிப்பாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருக்க தகுதியான நபரா என்று என்னிடம் கேட்டால், அது கேள்விக்குரியது தான்" என்று அஸ்வின் கூறியுள்ளார். கடைசியாக 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுகிற ஹர்ஷித் ராணா இரண்டு போட்டிகளில் விளையாடி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.