மும்பை : தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த நிலையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய அணில் கும்ப்ளேவின் 619 விக்கெட் சாதனையை அஸ்வின் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அஸ்வின் யாரும் நினைக்காத வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் இருந்து பாதியில் விலகி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அணில் கும்ப்ளே, அஸ்வினுடைய இந்த கிரிக்கெட் பயணம் மிகச்சிறந்தது.

இந்திய அணியின் சாம்பியன் பவுலராக அஸ்வின் விளங்கி இருக்கிறார். சாம்பியன் பௌலராக மட்டுமில்லாமல் ஆல்ரவுண்டராகவும் அஸ்வின் இருந்திருக்கிறார். அஸ்வினுடைய பங்கை இனி இந்திய அணி நிச்சயம் மிஸ் செய்யும். ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தன்னுடைய தோளில் சுமந்து கொண்டு அஸ்வின் விளையாடியது சாதாரண விஷயம் கிடையாது.
ஆனால் அஸ்வின் இதனை தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் செய்திருக்கிறார். நீங்கள் தான் இந்தியாவில் உண்மையான மேட்ச் வின்னர். இந்திய அணி உங்களை மிஸ் செய்யும். ஆனால் ஒரு விஷயத்தில் நீங்கள் ஓய்வு பெறுகிறீர்கள் என அறிவித்தவுடன் எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் நான் வீழ்த்திய 619 விக்கெட் ரெக்கார்டை நீங்கள் முறியடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.
ஆனால் நீங்கள் தனிப்பட்ட காரணங்களால் விலகி இருக்கிறீர்கள். உங்களுடைய இரண்டாவது அத்தியாயம் நல்லபடியாக இருக்கட்டும். உங்களுடைய முதல் அத்தியாயம் போல் அதுவும் சிறந்து விளங்கட்டும். இனி நீங்கள் செய்வதெல்லாம் சிறப்பாக அமையட்டும். உங்களை விரைவில் சந்திக்கிறேன் என்று அணில் கும்ப்ளே கூறியுள்ளார்.
அணில் கும்ப்ளே இந்திய அணிக்காக தன்னுடைய 20 வது வயதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி 18 ஆண்டுகள் வரை விளையாடினார். ஆனால் அஸ்வின் தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 25வது வயதில் தான் விளையாடினார். அஸ்வின் 13 ஆண்டுகள் தான் இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறார். கும்ப்ளே மொத்தமாக இந்திய அணிக்கு 132 டெஸ்ட் போட்டிகளும் 271 ஒரு நாள் போட்டிகளும் விளையாடி இருக்கிறார். ஆனால் அஸ்வின் இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளும் 116 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார்.