மும்பை : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் ஓய்வு பெற்றிருக்கிறார். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைனுடன் நடத்தப்பட்ட உரையாடலில் அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.
அப்போது அஸ்வினிடம் விராட் கோலி எப்போதுமே களத்தில் ஜாலியாக இருப்பார். நீங்கள் ஏன் அவருக்கு நேர்மாறாக சீரியஸாக இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அஸ்வின் நான் எப்படி இருக்கிறேனோ அதேபோலவே மக்களும் என்னுடைய இயல்பை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புவேன்.

நான் விக்கெட்டுகளை வீழ்த்தினால் விராட் கோலி களத்தில் துள்ளி குதிப்பார். ஆனால் நான் பெரிய அளவில் கொண்டாட மாட்டேன். அப்போது என்னிடம் பலரும் கேட்பார்கள். நீங்கள் விக்கெட் எடுத்தால் விராட் கோலி தான் சந்தோஷமாக இருக்கிறார்.
ஆனால் நீங்கள் ஏன் எப்போதுமே சீரியஸாக களத்தில் இருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்பார்கள். அதற்கு நான் முதலில் விடை அளிக்க விரும்புகிறேன். நான் நீங்கள் நினைப்பது போல் சீரியஸான ஆள் எல்லாம் கிடையாது. ஆனால் எனக்கு சில பொறுப்புகளை வழங்கி விட்டால், அதை நோக்கி தான் நான் செயல்படுவேன்.
என் கையில் பந்து இருந்தால் என் அணிக்கு டெஸ்ட் போட்டியை வென்று தர வேண்டும். என் நாட்டுக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும். என்னுடைய மனது, நினைப்பு எல்லாம் அதை நோக்கி தான் இருக்கும். இதனால் தான் நான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினாலோ இல்லை பேட்டிங்கில் ஏதேனும் சதம் அடித்தாலோ மைதானத்தில் இருக்கும் என்னுடைய மனைவியை பார்த்து நான் முத்தமிடலாம் மாட்டேன்.
சில சமயம் நான் களத்தில் இருப்பது என்னுடைய இயல்பான தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்தாது. இதனால் தான் என்னுடைய புத்தகத்தில் என் மனதில் இருக்கும் பல விஷயங்கள் குறித்து நான் எழுதி இருக்கிறேன் என்று அஸ்வின் கூறியுள்ளார். இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டி விளையாடியுள்ள அஸ்வின் பந்துவீச்சில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் பேட்டிங்கில் 3503 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஆறு சதம் மற்றும் 14 அரை சதம் அடங்கும்.