அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே!
மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பின் இந்தியா வந்த அணியின் தற்காலிக கேப்டன் ரஹானேவுக்கு மும்பையில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அவரது வீட்டின் அருகே இருந்தவர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடி கேக் வெட்ட ஏற்பாடு செய்து இருந்தனர்.
அந்த கேக்கின் வடிவமைப்பு ஆஸ்திரேலிய அணியை குறிப்பது போல இருந்ததால் ரஹானே அதை வெட்ட மறுத்தார்.

டெஸ்ட் தொடர் வெற்றி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 1 என்ற அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சாதனை புரிந்தது.

ரஹானே அசத்தல்
விராட் கோலி உட்பட பல முன்னணி இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களை மட்டும் வைத்துக் கொண்டு அணியை சிறப்பாக வழிநடத்தி கேப்டனாக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் அஜின்க்யா ரஹானே.

வரவேற்பு
இந்த வெற்றியை இந்திய மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தியா திரும்பிய அனைத்து வீரர்களுக்கும் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. அஜின்க்யா ரஹானேவுக்கு மும்பையில் அவரது இல்லத்திற்கு அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது.

கேக்
அப்போது ரஹானேவின் நண்பர் கங்காரு உருவம் வைத்து செய்யப்பட்ட கேக்கை வெட்டி ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தியதை கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தார். அந்த கேக்கை கண்ட ரஹானே அதை வெட்ட மறுத்து விட்டார்.

கண்ணியம் காத்தார்
ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இருந்தாலும், அந்த நாட்டின் அடையாளமான கங்காரு உருவம் கொண்ட கேக்கை வெட்டினால் அது அவர்களை அவமரியாதை செய்வது போல இருக்கும் என்பதால் அவர் கண்ணியத்துடன் அதை மறுத்து விட்டார்.


Click it and Unblock the Notifications