சிட்னி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர்களான ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் மீது பலருக்கு விமர்சனம் உண்டு. அவர்கள் இந்திய அணியை சரியாக வழி நடத்தவில்லை என்றும், சில முக்கிய தொடர்களையும், கோப்பைகளையும் அவர்களது தலைமையில் இந்திய அணி வென்று இருந்தாலும் இந்திய அணியை நிர்வகித்த வகையில் அவர்கள் தவறு செய்தார்கள் என்றும் பலரும் விமர்சித்தது உண்டு.
ஆனால், அது போன்ற விமர்சனங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என அந்த விமர்சனத்தை செய்தவர்களுக்கு உறைக்கும் வகையில் தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சிறப்பான தரமான, சம்பவங்களை செய்து வருகிறார். முன்னாள் வீரரும், சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி சுமார் ஐந்து ஆண்டு காலத்திற்கும் மேலாக இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார்.

அப்போது விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி செயல்பட்டு வந்தது. அப்போது பல முக்கிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது பற்றியும், இளம் வீரர்களை ஒவ்வொரு போட்டியிலும் மாற்றிக் கொண்டே இருந்தது பற்றியும் அந்த ஐந்து ஆண்டுகளும் விமர்சனங்கள் இருந்தன.
ஆனால், இந்திய அணி அப்போது சிறப்பாகவே செயல்பட்டு வந்தது என்பதை மறுக்க முடியாது. டெஸ்ட் போட்டிகளில் உலகின் நம்பர் 1 அணியாக வலம் வந்தது இந்திய அணி. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெறவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இரண்டு முறை டெஸ்ட் தொடரை வென்று இருந்தது.
மேலும், அந்த காலகட்டத்தில் சொந்த மண்ணில் இந்திய அணி வீழ்த்த முடியாத அணியாக வலம் வந்தது. உலகக் கோப்பைகளில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறியதுதான் ரவி சாஸ்திரியின் காலகட்டத்தில் இந்திய அணியின் மிக மோசமான செயல்பாடாக குற்றம் சாட்டப்பட்டது. அதற்காக ரவி சாஸ்திரியை விமர்சிக்காதவர்களே இல்லை.
அடுத்து மூன்று ஆண்டு காலத்திற்கு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ஜாம்பவான் ராகுல் டிராவிட் பற்றியும் சில விமர்சனங்கள் உண்டு. டிராவிட் பயிற்சியாளராக இருந்த போது இந்திய அணி அதிக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. எனினும், இந்திய அணி உலக கோப்பை தொடர்களில் இறுதி போட்டிவரை முன்னேறி வந்தது.
2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, 2023 ஒருநாள் போட்டி இறுதிப் போட்டி, 2024 டி20 உலகக் கோப்பை வெற்றி என 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் எடுக்கும் ஒரு மாணவனை போல தான் இருந்தது ராகுல் டிராவிட் காலகட்டம். ஆனால், இடையே ஓரிரு தொடர்களில் மட்டும் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது. பின்னர் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ராகுல் டிராவிட் இந்திய அணியை உச்சத்துக்கு கொண்டு சென்று விடைபெற்றார்.
ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட்டின் காலகட்டத்தில் இந்திய அணியில் குறைகள் இருந்தாலும், அவர்கள் விமர்சனங்களை சந்தித்தாலும் இந்திய அணி எப்போதும் படுமோசமான தொடர் தோல்விகளை சந்திக்கவில்லை. ஓரிரு போட்டிகளில் மோசமான தோல்விகள் ஏற்பட்டாலும், எந்த ஒரு தொடரையும் இந்திய அணி மோசமாக இழந்தது இல்லை. குறைந்தபட்ச போராட்டத்தையாவது வெளிப்படுத்தி இருக்கும்.
ஆனால், கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணி மூன்று தொடர்களில் மிக மோசமான தோல்விகளை சந்தித்து இருக்கிறது. முதலில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்தது.
அடுத்து சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்தது. அடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் 3 - 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வந்தது இந்திய அணி.
ஆனால், இப்போது மிக எளிதாக வீழ்த்தப்பட்டு இருக்கிறது. இதற்கு இந்திய வீரர்களும் காரணம் என்றாலும் கம்பீர் பயிற்சியாளராக வந்தது முதல் தான் இந்த மோசமாக தோல்விகள் ஏற்பட்டு வருகின்றன. அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளன. அந்த வகையில் பயிற்சியாளர் அணியை சரியாக ஒருங்கிணைக்கவில்லை, போட்டிகளுக்கு முன் சரியாக திட்டமிடவில்லை என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் மோசமான செயல்பாட்டை பார்க்கும் போது இனி எந்த காலகட்டத்திலும் முன்னாள் பயிற்சியாளர்களான ரவி சாஸ்திரி பற்றியோ, ராகுல் டிராவிட் பற்றியோ ஒரு வார்த்தை கூட விமர்சிக்க கூடாது. அந்த காலம் பொற்காலம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் நியாயமும் கூட.