பெங்களூர் : ஆஸ்திரேலிய டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் இரண்டு பந்துவீச்சாளர்களுக்கு அடுத்து நடக்க உள்ள தென்னாப்பிரிக்க டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நான்கு போட்டிகள் முடிந்துள்ளது. இந்த தொடரில் இதுவரை அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருப்பது ரவி பிஷ்னோய் மற்றும் அக்சர் பட்டேல்.
ரவி பிஷ்னோய் 7 விக்கெட்களும் மற்றும் அக்சர் பட்டேல். 5 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளனர். இருவரும் நன்றாக பந்து வீசுவதாக பலரின் பாராட்டைப் பெற்றாலும் அடுத்து நடக்க உள்ள தென்னாப்பிரிக்க டி20 தொடரில் அவர்களுக்கு இடம் இல்லை என்றே கூறப்படுகிறது.

அக்சர் பட்டேல் தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான அணியிலேயே சேர்க்கப்படவில்லை. அந்த தொடரில் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஜடேஜா கடைசியாக ஆகஸ்ட் 2022இல் தான் சர்வதேச டி20 போட்டியில் ஆடி இருக்கிறார். அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம் பெற வாய்ப்பில்லை என முதலில் கூறப்பட்டது ஆனால், அவரையும் டி20 உலகக்கோப்பை ரேஸில் சேர்த்து ஓட வைக்க முடிவு செய்து, தென்னாப்பிரிக்க டி20 தொடரில் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் நிச்சயம் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவுக்கு போட்டிகளில் பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கும். ரவி பிஷ்னோய் போட்டிக்கான அணியில் இடம் பெறுவது சந்தேகமே. ஆனால், அவரை டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க செய்தால் நிச்சயம் பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட் வீழ்த்தி திருப்பம் ஏற்படுத்துவார். ஆனால், தேர்வுக் குழு செய்து வரும் குளறுபடிகளால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
ரவீந்திர ஜடேஜா டி20 அணியின் துணை கேப்டனாக நியமித்து இருப்பதை வைத்துப் பார்த்தால் அவரை டி20 அணியின் நிரந்தர வீரராகவே பிசிசிஐ பார்ப்பதாக தெரிகிறது. அவரைத் தாண்டி அக்சர் பட்டேல் வாய்ப்பு பெறுவதும் கடினம்.