திருவனந்தபுரம் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளிலேயே தான் யார் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார் இளம் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய்.
இந்திய அணியில் தற்போது குல்தீப் யாதவ் விக்கெட் எடுக்கும் திறன் கொண்டவர் என பெயர் எடுத்த நிலையில் அவரை மிஞ்சும் அளவுக்கு பவுலிங் போட்டு பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட் வேட்டையாடி வருகிறார் ரவி பிஷ்னோய்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அங்கே இரு அணிகளும் அதிக ரன் வேட்டையாடிய நிலையில் ரவி பிஷ்னோய் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால், பவர்பிளேவில் ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர் மேத்யூ ஷார்ட் விக்கெட்டை வீழ்த்தினார்.

அடுத்து இரண்டாவது போட்டியும் அதிக ரன் குவிக்க ஏற்ற வகையிலான திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ரவி பிஷ்னோய் இன்னும் ஒரு படி மேலே சென்று மூன்று விக்கெட்களை சாய்த்தார். பவர்பிளே ஓவர்களில் துவக்க வீரர் மேத்யூ ஷார்ட் மற்றும் கடந்த போட்டியில் சதம் அடித்த ஜோஷ் இங்லிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். பின்னர் ஸ்டோனிஸ் உடன் சேர்ந்து 50 ரன்களுக்கும் மேல் கூட்டணியாக ரன் குவித்த டிம் டேவிட் விக்கெட்டை சாய்த்தார்.
இரண்டாவது டி20 போட்டியில் 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை சாய்த்தார் ரவி பிஷ்னோய். அவர் லெக் பிரேக் கூக்ளி வகை பந்துகளை வீசுகிறார். அந்தா பந்துவீச்சை கவனமாக கையாளவில்லை என்றால் பந்து ஸ்டம்ப்பை பதம் பார்ப்பது உறுதி. அதே சமயம் பந்து பேட்டுக்கு வருவதால் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கவும் வாய்ப்பு அதிகம். இதனிடையே ரவி பிஷ்னோய் சாமர்த்தியமாக விக்கெட் வீழ்த்தி வருகிறார்.
குல்தீப் யாதவும் கிட்டத்தட்ட இதே பணியைத் தான் ஒருநாள் அணியில் சமீபத்தில் உலகக்கோப்பை தொடரில் செய்தார். ஆனால், அவரது விக்கெட் எடுக்கும் திறன் குறித்த விமர்சனங்களும் உள்ளது. அதனால், ஒன்று, இரண்டு தொடர்களில் குல்தீப் யாதவ் சரியாக பந்து வீசவில்லை என்றால் அவர் இடத்தை ரவி பிஷ்னோய் பிடித்து விடுவார் என்பதில் சந்தேகமே இல்லை.