மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் புதன்கிழமை காண்பெராவில் தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 1: 45 மணிக்கு தொடங்குகிறது.
இந்த தொடரில் அபிஷேக் ஷர்மா ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக இருப்பார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபிஷேக் சர்மா 314 ரன்கள் அடித்திருந்தார். இதில் அவருடைய சராசரி 45 என்ற அளவில் ஸ்டிரைக் ரேட் 200 என்ற அளவில் இருக்கின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, டி20 கிரிக்கெட்டில் அபிஷேக் ஷர்மா அபாயகரமான வீரராக விளங்குகிறார். அவர் களத்தில் நின்றால் நிச்சயம் பொழுதுபோக்கு ரசிகர்களுக்கு கிடைக்கும். இந்திய ரசிகர்களும், ஆஸ்திரேலிய ரசிகர்களும் நிச்சயமாக அபிஷேக் ஷர்மா பேட்டிங் செய்வதை மகிழ்ச்சியுடன் பார்ப்பார்கள்.
எதிரணியிடம் இருந்து ஆட்டத்தை கவர்ந்து செல்வதில் அபிஷேக் ஷர்மா வல்லவர். களத்தில் அவர் நீண்ட நேரம் இருக்கக் கூடாது என எதிரணி வீரர்கள் நினைப்பார்கள். ஏனென்றால் அவர் களத்தில் நின்றால் உங்களுக்கு தான் பிரச்சனை ஆகிவிடும். அபிஷேக் ஷர்மா ஒவ்வொரு தொடருக்கும் சிறப்பான முறையில் தயாராகி வருகிறார்.
அவர் அவருடைய பேட்டிங் பலத்தை நம்புகிறார். அவர் பேட்டிங்கில் பல ஷாட்களை ஆடும் திறனை வைத்திருக்கின்றார். முதல் பந்தில் இருந்து அவர் தன்னை நம்பி விளையாடுகிறார்.இதன் காரணமாகத்தான் தொடக்கத்திலிருந்து பவுலர்களை எதிர்கொண்டு அதிரடியாக விளையாடுகிறார். இதன் மூலம் மிகவும் அபாயகரமான வீரராக அபிஷேக் ஷர்மா மாறிவிடுகிறார்.
தன்னை நம்புவதால் தான் அபிஷேக் ஷர்மா இப்படி ஆடுகிறார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியா மண்ணில் அபிஷேக் ஷர்மா விளையாடுகிறார்.