சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. நவம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஒரு பக்கம் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் விடுப்பு எடுத்துக் கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இன்னொரு பக்கம் இந்திய அணி சொந்த மண்ணிலேயே 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி விளையாடி வருகிறது. அதேபோல் ஆஸ்திரேலியா மண்ணில் ஆல்ரவுண்டரின் முக்கியத்துவத்தை அறிந்து ஹர்திக் பாண்டியாவை தயார் செய்து வருகிறது. இதனால் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதனிடையே ஆஸ்திரேலியா வீரர்கள் மற்றும் ஜாம்பவான்கள் ஒவ்வொரு நாளும் இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் பற்றி பேசி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் பேசுகையில், இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை பொறுத்த வரை அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் முக்கியமான வீரர்கள்.
இவர்களின் செயல்பாடுகளை பொறுத்தே ஆட்டத்தின் முடிவுகள் அமையும். இதுவரை அப்படிதான் நடந்து வந்துள்ளது. ஏனென்றால் அஸ்வின் - ஜடேஜா இருவரும் இணைந்து 330 இன்னிங்ஸ்களில் 821 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்திய அணி சொந்த மண்ணில் அடைந்திருக்கும் வெற்றிக்கு பெரும்பாலான காரணம் இவர்கள் இருவரும் தான்.
தற்போது வெளிநாடுகளிலும் இவர்கள் சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. அதனால் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடினாலே, ஆஸ்திரேலியா அணியால் நல்ல ரன்களை சேர்க்க முடியும். ஒரு போட்டியின் முடிவு எப்படி இருக்க வேண்டும் என்பதில் இருவரும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
அதனால் இந்திய அணி பவுலிங் செய்யும் போது, இவர்கள் கவனமாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தாலே, நிச்சயம் வெல்லலாம். அதேபோல் பும்ராவை பொறுத்தவரை 2013ஆம் ஆண்டு முதல்முறையாக சந்தித்தேன். அப்போது மும்பை அணிக்காக விளையாடிய போது, பும்ரா இளம் வீரராக இருந்தார். அதனால் வலைப்பயிற்சியில் பெரும்பாலும் எனக்கு தான் பவுலிங் செய்வார்.
இளம் வீரராக இருந்து அவர் தற்போது அடைந்திருக்கும் உயரம் ஆச்சரியமாக உள்ளது. 3 வடிவங்களிலும் சேர்த்து பார்த்தால், அவர் தான் மிகச்சிறந்த பவுலராக திகழ்ந்து வருகிறார். இதனை நினைத்து பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், பார்டர் கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியா அணி வென்று 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிடட்து குறிப்பிடத்தக்கது.