மும்பை: ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த இந்திய சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிதாக கண்டுபிடித்துள்ள ஸ்பெஷல் பந்து குறித்து தங்களுக்கும் கூறலாம் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா அணியின் பலரும் இந்திய வீரர்களை மனதளவில் தாக்கும் தந்திரத்தை தொடங்கிவிட்டதாகவும் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. ஒவ்வொரு 2 டெஸ்ட் போட்டிக்கும் இடையில் சீரான ஓய்வு அளிக்கப்பட்டு, ஜனவரி முதல் வாரம் வரை 5 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த டெஸ்ட் தொடரில் வெற்றிபெறும் அணியால் நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2 முறையும் ஆஸ்திரேலியா மண்ணில் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணியே கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. ஆஸ்திரேலியா அணியால் 10 ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு இது கவுரவப் பிரச்னையாக மாறியுள்ளது.
இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் ஜோஷ் ஹேசல்வுட், நேதன் லயன், மிட்சல் ஸ்டார்க் உள்ளிட்டோர் நேரடியாக இந்திய அணியை வீழ்த்தி காட்டுவோம் என்று கூற தொடங்கியுள்ளனர். அதேபோல் இன்னொரு பக்கம் ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், ஆடம் கில்கிறிஸ்ட், மெக்ராத் உள்ளிட்டோர் இந்திய வீரர்களின் நம்பிக்கையை குறைக்கும் வகையில் பேச தொடங்கியுள்ளனர்.
ஆனால் இந்தியா தரப்பில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். இந்த விவகாரம் குறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய அணி சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
மனதளவில் கடினமான சுற்றுப்பயணத்திற்கு தயாராக 5 டெஸ்ட் போட்டிகளும் உதவியாக அமையும் என்று நினைக்கிறேன். அதேபோல் ஆஸ்திரேலியா வீரர்களும், முன்னாள் வீரர்களும் மைண்ட் கேம்ஸை தொடங்கிவிட்டார்கள். டெஸ்ட் தொடரின் கணிப்பை வெளியிட்டும், வீரர்களை ஒப்பிட்டும் பேச தொடங்கிவிட்டார்கள். அதேபோல் கிளென் மெக்ராத்தை போல் ஒயிட் வாஷ் செய்வோம் என்றும் கூற முடியவில்லை.
இருந்தாலும் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்றே கூறி வருகின்றனர். ஆனால் ஆஸ்திரேலியாவின் மைண்ட் கேம்ஸ்-க்கு இந்தியாவில் இருந்து ரவி சாஸ்திரியை தவிர்த்து வேறு யாரும் பதிலடி கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன். அதில் ஆஸ்திரேலியர்கள் கில்லாடிகள் தான். அதனால் இந்தியா பதிலடி கொடுப்பதற்காக எங்களுக்கு சில விஷயங்களை இந்திய வீரர்கள் கூறிலாம்.
குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்துவதற்காக அஸ்வின் கண்டறிந்துள்ள ஸ்பெஷல் பந்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். அப்படியென்றால் அவர் பும்ராவின் முதல் ஸ்பெல்லில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அஸ்வின் 8 முறை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.