மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி புகழ் சின்னாபின்னமாகி உள்ளது. நாலா பக்கமும் அவர்களை விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மற்றொரு மூத்த வீரரான அஸ்வின் இந்த அவமானங்களில் இருந்து தப்பும் வகையில் முன்னதாகவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருக்கிறார் என சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அது போல அணியில் சரியான நிலைமை இல்லை என்பதை உணர்ந்து அஸ்வின் அணியில் இருந்து விலகும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்து விலகிவிட்டார் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதே சமயம் டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை விட மிக மோசமாக விளையாடி வரும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அணியில் நீடித்து தங்கள் நிலைமையை சிக்கலானதாக மாற்றிக் கொண்டு உள்ளனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வினை விளையாட வைக்க போவதில்லை என்றால் அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அவரை உத்தேச அணியில் தேர்வு செய்த இந்திய அணி நிர்வாகம் முதல் போட்டியில் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கவில்லை.
அப்போதே அஸ்வின் ஓய்வை அறிவிக்கும் முடிவில் இருந்ததாக கூறப்படுகிறது. நிச்சயமாக அவருக்கு ஐந்து போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு அளிக்கப்படாது என்ற தகவல் சொல்லப்பட்டிருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அதன் பின் அஸ்வின் ஓய்வை அறிவிக்க உள்ளதாக தெரிவித்தவுடன் உடனடியாக அவருக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. பின்னர் மூன்றாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன் பின்னர் நிரந்தரமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகும் முடிவை எடுத்தார்.
அதை தடுத்து நிறுத்தும் அளவுக்கு இந்திய அணியில் யாருக்கும் போதுமான காரணம் இல்லை. ஏனெனில் அஸ்வினை எப்படியும் ஒதுக்கி வைப்பது என்ற முடிவில் தான் இந்திய அணி இருந்துள்ளது. ஆனால், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மிக மோசமான ஃபார்மில் இருந்தும் குறைந்த பட்சம் தாங்களாகவே அணியில் இருந்து விலகி உள்ளூர் போட்டிகளில் ஆடுவதாக அறிவிக்காமல் தொடர்ந்து இந்திய அணியில் விளையாடி விமர்சனத்தை சந்தித்து இருக்கிறார்கள்.