சென்னை: 2026 டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ள அணியாக கருதப்படுகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 2-1 என்ற முன்னிலையை பெற்று, கோப்பையை வெல்லத் துடிக்கும் மற்ற அணிகளுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இரண்டு முக்கிய வீரர்களை தாண்டி தான் இந்தியாவை வீழ்த்த முடியும் என சுட்டிக் காட்டி இருக்கிறார் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இதில் உலகின் சிறந்த டி20 பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவையோ அல்லது அதிரடி மன்னன் சூர்யகுமார் யாதவையோ அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்தியாவில் நடைபெற உள்ள 2026 டி20 உலகக் கோப்பையை வெல்ல எந்த அணி விரும்பினாலும், அவர்கள் இரண்டு முக்கிய வீரர்களை கையாள வேண்டும். இதுவரை நான் ஜஸ்பிரித் பும்ராவைச் சமாளிப்பதுதான் முக்கியம் என்று கூறிவந்தேன். ஆனால், இப்போது வருண் சக்கரவர்த்தியை டிம் டேவிட் எதிர்கொண்ட விதத்தைப் பார்த்த பிறகு, நான் ஒன்றை உறுதியாகச் சொல்வேன். இந்தியாவைக் கடந்து செல்ல வேண்டுமானால், மற்ற அணிகள் அபிஷேக் சர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தியைக் குறிவைத்துத் தாக்குவார்கள்" என்று அஸ்வின் கூறினார்.
அபிஷேக் சர்மாவின் அதிரடியைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா பயன்படுத்திய தந்திரம் குறித்தும் அஸ்வின் விளக்கினார். பவர்பிளே ஓவர்களில், ஆஸ்திரேலியாவின் தொடக்கப் பந்துவீச்சாளர்கள் அபிஷேக் சர்மாவின் 'ஸ்விங் ஆர்க்' எனப்படும், அவரது பேட் வீச்சுக்கு வசதியான திசையில் பந்துவீசாமல், அதற்கு வெளியே பந்துவீசி ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தினர். இதனால், தொடர் முழுவதும் அபாரமான ஃபார்மில் இருந்த அபிஷேக், அந்தப் போட்டியில் சற்று தடுமாற்றத்துடன் காணப்பட்டார். இது உலகக் கோப்பைக்குத் தயாராகும் மற்ற அணிகளின் பயிற்சியாளர்கள் உன்னிப்பாகக் கவனிக்கும் ஒரு விஷயமாகும்.
அதேபோல, வருண் சக்கரவர்த்தியை ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் எதிர்கொண்ட விதத்தை அஸ்வின் சுட்டிக்காட்டிபேசினார். இந்த இரு வீரர்களுக்கு எதிராகவும் ஆஸ்திரேலியா பயன்படுத்திய இந்தத் திட்டங்களை, உலகக் கோப்பைக்கு வரும் மற்ற அணிகளும் பின்பற்றித் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் என்று அஸ்வின் கூறினார்.