பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இந்திய பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா அணியில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், இந்திய அணியின் கேப்டன் பும்ரா மற்றும் கம்பீர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் பெர்த் மைதானத்தில் தொடங்கவுள்ளது. கடந்த 2 முறையும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா அபார வெற்றியை பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இம்முறை ஆஸ்திரேலியா அணி பதிலடி கொடுக்க தீவிரமாக இருக்கிறது.

இதற்காகவே முதல் டெஸ்ட் போட்டியை பெர்த் மைதானத்தில் நடத்த முடிவு செய்திருக்கிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள பெர்த் மைதானத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் நடந்துள்ளன. இந்த 4 போட்டிகளிலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றியை பெற்றுள்ளன. அதேபோல் இந்த 4 போட்டிகளிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் 102 விக்கெட்டுகளையும், ஸ்பின்னர்கள் 37 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றனர்.
அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணியின் நேதன் லயன் 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலமாக பெர்த் மைதானத்தில் பவுன்ஸ், வேகம் மட்டுமல்லாமல் கொஞ்சம் ஸ்பின்னர்களுக்கு உதவியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்க்க முடிவு எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை அஸ்வின், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பெர்த் மைதானத்தில் ஒரேயொரு ஸ்பின்னர் மட்டுமே போதும் என்பதால், இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டியுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியில் மட்டும் உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கேரி என்று 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித்திற்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச்சிறப்பாக விளையாடி இருக்கிறார். அதேபோல் டாப் ஸ்பின்னில் அஸ்வின் கில்லி என்பதால், அவருக்கு முதல் டெஸ்டில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
வழக்கமாக வெளிநாடுகளில் அஸ்வினை விடவும் ஜடேஜாவுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்கு ஜடேஜாவின் பேட்டிங் முக்கியக் காரணம். ஆனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இம்முறை அஸ்வின் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனை காப்பாற்ற அஸ்வின் நிச்சயம் போராடுவார் என்று எதிர்பார்க்கலாம்.