பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்த ரவீந்திர ஜடேஜா 56 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார். அவர் முதல் இன்னிங்ஸில் 77 ரன்கள் அடித்ததன் மூலம் இந்த வரலாற்று சாதனையை செய்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் ரவீந்திர ஜடேஜாவுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ஒரே ஒரு சுழற் பந்துவீச்சாளர் மட்டுமே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு போதும் என்ற முடிவில் இருந்த இந்திய அணி நிர்வாகம் முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தரையும், இரண்டாவது போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினையும் தேர்வு செய்து இருந்தது. இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர்கள் இருவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு ரவீந்திர ஜடேஜா பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்றார்.
தனது தேர்வை நியாயப்படுத்தும் வகையில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது அவர் 77 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க போராடி வந்தது.
அப்போது கே எல் ராகுல் 84 ரன்கள் எடுத்து இருந்தார். ஏழாம் வரிசையில் இறங்கிய ரவீந்திர ஜடேஜா 77 ரன்கள் சேர்த்து இந்திய அணி ஃபாலோ ஆனை கடக்க முக்கிய காரணமாக இருந்தார். இதன் மூலம் அவர் காபா மைதானத்தில் ஏழாம் வரிசையில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.
1968 ஆம் ஆண்டு காபா மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காபா மைதானத்தில் இந்திய அணியின் சந்து போர்டே 63 ரன்கள் எடுத்திருந்தார். அதுவே அந்த மைதானத்தில் இந்திய அணியின் ஏழாம் வரிசை வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. சுமார் 56 ஆண்டுகளுக்கு பின்னர் அதே காபா மைதானத்தில் இந்திய அணியில் ஏழாம் வரிசையில் இறங்கிய ரவீந்திர ஜடேஜா 77 ரன்கள் எடுத்து முந்தைய சாதனையை முறியடித்து இருக்கிறார்.