இரு வீரர்கள் காயம்
சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் ரிஷப் பண்ட், ஜடேஜா என இரு வீரர்கள் காயம் அடைந்தனர். இரண்டாம் இன்னிங்க்ஸில் இவர்களால் ஆட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பண்ட் காயம்
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 338 ரன்கள் குவித்தது. இந்திய அணி அடுத்து பேட்டிங் செய்தது. அப்போது ரிஷப் பண்ட்டுக்கு கை முட்டியில் காயம் ஏற்பட்டது. அவர் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
தாக்கிய பந்து
அதன் பின் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அடுத்து ஜடேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 28 ரன்கள் எடுத்தார். அவர் பேட்டிங் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து அவர் இடது கை பெருவிரலில் தாக்கியது.
ஜடேஜா காயம்
அப்போதே ஜடேஜா வலியால் துடித்தார். எனினும், அதை சமாளித்து அவர் தொடர்ந்து பேட்டிங் செய்தார். இந்தியா 244 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்க்சை முடித்த உடன் அவர் மருத்துவமனைக்கு விரைந்தார். முதல் இன்னிங்க்ஸில் பந்து வீச்சில் ஜடேஜா 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிக்கல்
மேலும், அவர் ஸ்டீவ் ஸ்மித்தை ரன் அவுட் செய்து, 5 விக்கெட்களின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார். அவர் இல்லாமல் இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்தியா பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. அதே போல, ரிஷப் பண்ட்டுக்கு பதில் விரிதிமான் சாஹா விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார்.