சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா 3 போட்டிகளில் விளையாடி 135 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை அதிகரித்துள்ளது. இதனால் அஸ்வினை பின்பற்றி ஜடேஜாவும் ஓய்வை அறிவிப்பாரா என்ற குரல்கள் எழுந்துள்ளன.
10 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த போதும், ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்றிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஏனென்றால் 295 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வியில் இருந்து ஆஸ்திரேலியா அணியால் எளிதாக மீண்டு வர முடிந்தது எப்படி என்ற பலரும் விவாதித்து வருகின்றனர். இதற்கு இந்திய அணியின் மோசமான ஆட்டமே காரணமாக பார்க்கப்படுகிறது. பிளேயிங் லெனில் நடந்த மாற்றங்கள், சீனியர் வீரர்களின் சொதப்பல்கள் என்று இந்திய அணி தவறு செய்த பட்டியல் மிக நீண்டதாகும்.
சீனியர் வீரர்கள் என்று சொல்லும் போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருடன் ரசிகர்கள் நிறுத்திவிடுகின்றனர். இதில் மற்றொரு சீனியர் வீரரான ரவீந்திர ஜடேஜாவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலும் ஜடேஜாவால் பெரிதாக எந்த பங்களிப்பையும் இந்திய அணிக்கு அளிக்க முடியவில்லை.
இந்த டெஸ்ட் தொடரில் கடைசி 3 போட்டிகளில் ஆடிய ஜடேஜா பவுலிங்கில் 4 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் ஒரு அரைசதம் உட்பட 135 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். 63 ஓவர்களை வீசிய போதும், அவரால் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடிந்துள்ளது. ஆனால் மறுமுனையில் ஆஸ்திரேலியா அணியின் நேதன் லயன் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் லயன். அதே மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை டிரா செய்யும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்த போது, ஜடேஜாவால் தாக்கு பிடிக்க முடியவில்லை. சிட்னி டெஸ்ட் போட்டியிலும் 26 மற்றும் 13 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
இதன் மூலமாக வெளிநாடுகளில் ஜடேஜாவின் பவுலிங் கிட்டத்தட்ட மிக எளிதாக பேட்ஸ்மேன்களால் கையாளப்படுவதை பார்க்க முடிகிறது. அவரால் ஸ்பின் செய்ய முடியாததால், வெறும் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைன் பந்துகளை மட்டுமே வீசி விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சித்து வருகிறார். அது கடந்த சில ஆண்டுகளாகவே பலனளிக்கவில்லை.
இதனால் அஸ்வினை பின்பற்றி ஜடேஜாவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று ரசிகர்கள் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். ஏனென்றால் இந்திய பிட்சில் ஜடேஜாவின் இடத்தை நிரப்ப அக்சர் படேல் எப்போதோ தயாராகிவிட்டார். இதனால் இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஸ்பின் கூட்டணியை உருவாக்க ஜடேஜா இடமளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.