அடிலெய்ட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி பூஜ்ஜியத்துக்கு இரண்டு என்ற கணக்கில் இழந்தது. ஆசிய கண்டங்களில் உள்ள மைதானங்கள் போல் இருக்கும் அடிலலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவால் அளித்து இந்திய வீரர்கள் தோற்றனர்.
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். இந்திய அணியின் விராட் கோலி மற்றும் கேப்டன் கில் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற ஆடுகளங்களில் பவர்பிளேவை சரியாக பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.

ஆனால் இந்தியாவின் பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழந்ததால் டெஸ்ட் இன்னிங்ஸ் போல் ஆடினார்கள். முதல் பத்து ஓவரில் வெறும் 29 ரன்கள் மட்டுமே இந்தியா எடுத்தது. ஆனால் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் கில்லும், விராட் கோலியும் ரன்களை சேர்த்திருந்தால், இந்நேரம் இந்தியா அணி 300 ரன்களுக்கு மேல் எடுத்து வெற்றியை பெற்றிருக்கும்.
265 ரன்கள் என்ற இலக்கியே எட்டுவதற்கு ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட்டுகளை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவின் பேட்டிங்கில் கொஞ்சம் கூடுதலாக ரன்கள் சேர்த்து இருக்க வேண்டும். இதுபோன்று நடுவரிசையில் கே எல் ராகுல் ஆறாவதாக இறக்கப்படுவதும் தவறு என்ற கூறப்படுகிறது. இதே போன்று பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும் மேத்யூ ஷாட் மற்றும் மேட் ரீன்சா ஆகியோர் ரன்கள் சேர்க்க வழிவிட்டது தவறு. இந்த ஆடுகளத்தில் குல்தீப் யாதவ் கண்டிப்பாக களம் இறக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆஸ்திரேலியா பந்துவீச்சில் சுழற் பந்துவீச்சாளர் அடம் ஜாம்பா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் குல்தீப் யாதவை நாம் பயன்படுத்தி இருந்தால் அவர் நிச்சயம் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்திருப்பார். அனுபவம் இல்லாத வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது குல்தீப் யாதவ் கண்டிப்பாக அணியில் இருந்திருக்க வேண்டும்.
அந்த விஷயத்திலும் இந்தியா தவறு செய்துவிட்டது. இந்திய வீரர்கள் இரண்டு கேட்சை கோட்டைவிட்டதும் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று ஆசிய கோப்பை தொடரில் தேவையில்லாமல் பும்ராவை விளையாட வைத்தார்கள். அதற்கு பதிலாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பும்ராவை பயன்படுத்தி இருந்தால் கூட அவர் இந்திய அணிக்கு பெரும் பலமாக மாறி இருப்பார்.