அகமதாபாத்: உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான கள நடுவராக இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் கெட்டில்பரோ தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத் மைதானத்தில் நாளை மறுநாள் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியின் மூலமாக 2003ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழி தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான இறுதிக் கட்ட பணிகளில் பிசிசிஐ மற்றும ஐசிசி தீவிரமாக இறங்கியுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான நிறைவு விழாவில் விமான சாகசங்கள், ஜோனிதா காந்தி மற்றும் ப்ரீதம் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உலகக்கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன்களும் மைதானத்திற்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கான நடுவர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் கள நடுவர்களாக ரிச்சர்ட் கெட்டில்பரோ, ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் செயல்பட உள்ளனர். அதேபோல் மூன்றாம் நடுவராக ஜோயல் வில்சன் செயல்படவுள்ளார். போட்டியின் நடுவராக ஆண்டி பைகிராஃப்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கள நடுவராக ரிச்சர்ட் கெட்டில்பரோ நியமிக்கப்பட்டுள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்த அத்தனை போட்டிகளிலும் ரிச்சர்ட் கெட்டில்பரோ தான் நடுவராக செயல்பட்டுள்ளார். இவர் நடுவராக இருந்த 2014ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் இலங்கை அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. அதேபோல் 2015 உலக்கோப்பை அரையிறுதியில் இந்தியா அடைந்த தோல்வி, 2016 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது.
அதேபோல் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. அப்போது ரிச்சர்ட் கெட்டில்பரோ தான் நடுவராக பணியாற்றியுள்ளார். அதேபோல் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியின் தோனி ரன் அவுட்டான போது, நடுவராக இருந்து கெட்டிபரோ கொடுத்த ரியாக்ஷன் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகும். அதேபோல் 2023ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சுப்மன் கில்லுக்கு அவுட் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் கெட்டில்பரோ.
இப்படி இவர் நடுவராக வந்த போதெல்லாம் இந்திய அணி சொதப்பியதா அல்லது இந்திய அணி சொதப்பும் போதெல்லாம் இவர் நடுவராக உள்ளாரா என்று ரசிகர்கள் குழம்பும் அளவிற்கு ரிச்சர்ட் கெட்டில்பரோ ரசிகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். தற்போது உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கும் இவர் நடுவராக செயல்படவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் பீதியை கொடுத்துள்ளது.