திருவனந்தபுரம் : இளம் வீரர் ரிங்கு சிங் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளில் ஆடி, இரண்டிலும் தன் அதிரடி ஆட்டத்தால் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.
இந்த நிலையில் அது குறித்து அவரிடம் கேட்ட போது இது எல்லாமே முன்னாள் இந்திய அணி ஜாம்பவான் வீரரான விவிஎஸ் லக்ஷ்மன் சொன்ன திட்டத்தின்படி தான் நடக்கிறது என வெளிப்படையாக கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 ஓவர்களில் 40 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய ரிங்கு சிங், ஒரு பக்கம் விக்கெட்கள் வீழ்ந்து கொண்டு இருக்க கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில் சிக்ஸ் அடித்தார். அந்தப் போட்டியில் அவர் 14 பந்துகளில் 22 ரன்கள் அடித்து இருந்தார்.

அடுத்து இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில் அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்பதால் கடைசி 2 ஓவர்களில் இறங்கிய ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை நிலைகுலைய வைத்தார். அவரது அதிரடியால்
210 ரன்களுடன் நிற்க வேண்டிய இந்திய அணியின் ஸ்கோர், எளிதாக 235 ரன்களை எட்டியது.
இந்தியா இரண்டாவது போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் போட்டிக்கு பின் பேசிய ரிங்கு சிங் அணியில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலை சில ஓவர்கள் இறங்கி அதிரடி ஆட்டம் ஆட வேண்டியது தான் எனவும், இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் தன்னை அதற்காக தயார் ஆகுமாறு கூறியதாகவும் தெரிவித்தார்.
விவிஎஸ் லக்ஷ்மன் இயல்பாகவே சற்று அதிரடி மனநிலை கொண்டவர் என அறியப்படுபவர். என்ன தான் டெஸ்ட் பேட்ஸ்மேன் என பெயர் எடுத்திருந்தாலும் அவர் மனதளவில் தடுப்பாட்டம் ஆடுவதெல்லாம் இருக்காது என முன்பு அவருடன் ஆடியவர்கள் கூறியதுண்டு. அதே போன்ற மனநிலையை அவர் அடுத்த தலைமுறை வீரர்களுக்கும் எடுத்துச் செல்கிறார். ரிங்கு சிங் இயல்பாகவே அதிரடி ஆட்டம் ஆடும் குணம் கொண்டவர். அவரை அதற்காக மட்டுமே பயிற்சி செய்ய சொல்லி அவரை 100 சதவீத பினிஷராகவே மாற்றி இருக்கிறார் லக்ஷ்மன்.
ஐபிஎல் தொடர் முடிந்தது முதல் ரிங்கு சிங், இந்திய அணியில் ஆடிய போதெல்லாம் விவிஎஸ் லக்ஷ்மன் அணியின் பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ரிங்கு சிங் ஐபிஎல் தொடரை விட ஒரு படி மேலாக இந்திய அணிக்காக அதிரடி ஆட்டத்தை ஆடி வரும் நிலையில், அதன் பின்னணியில் லக்ஷ்மன் தான் இருக்கிறார் என்பதை தற்போது அவரே கூறி இருக்கிறார்.
ரிங்கு சிங் இது பற்றி பேசுகையில், "எனது வேலை அணியின் ஸ்கோரை கடைசி நேரத்தில் உயர்த்துவது தான். எனக்கு சில ஓவர்கள் மட்டுமே பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கும் என கூறி இருக்கிறார்கள். அதற்கேற்ப நான் விளையாடுகிறேன். நான் அதற்காகவே பயிற்சி செய்கிறேன். விவிஎஸ் லக்ஷ்மன் சார் என்னை அதை மட்டுமே செய்ய சொல்லி இருக்கிறார்" என்றார் ரிங்கு சிங்.