கொல்கத்தா : ரிங்கு சிங் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக மாறிய நிலையில், அவரது வளர்ச்சியில் முன்னாள் வீரர் ஒருவருக்கு பெரிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது.
கிட்டத்தட்ட சொந்த மகனைப் போல ரிங்கு சிங் காயத்தில் இருந்த போது தன் வீட்டில் தங்க வைத்து அவரைப் பார்த்துக் கொண்டது முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் தான்.
அபிஷேக் நாயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை பயிற்சியாளர். உள்ளூர் போட்டியில் ரிங்கு சிங்கை அடையாளம் கண்டு ஐபிஎல் தொடரில் வளர்த்து எடுத்தவர் அவர்தான். துவக்கத்தில் ரிங்கு சிங் கிடைத்த வாய்ப்பில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனாலும், அபிஷேக் நாயர் அவர் மீது ஒரு கண் வைத்து அவருக்கு ஆலோசனைகள் கூறி வந்தார்.

ஒரு முறை ஐபிஎல் தொடரின் போது அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டு இருந்தது. அப்போது அணி நிர்வாகத்திடம் பேசி அவரை அணியில் இருந்து நீக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார் அபிஷேக் நாயர். அந்த ஐபிஎல் தொடர் முடிந்த பின் காயத்தில் இருந்து ரிங்கு சிங்கை மீட்டு, அவர் மீண்டும் போட்டிகளில் ஆட தயார் செய்யும் பணியை தானே ஏற்றுக் கொண்டார் அபிஷேக்.
அதற்காக, ரிங்கு சிங்கை தன் வீட்டிலேயே தங்க வைத்தார். தினமும் அவருக்கு பயிற்சிகள் அளித்து அவரை படிப்படியாக முன்னேற்றினார். கிட்டத்தட்ட ஒரு தந்தையைப் போல அவரது வளர்ச்சியில் அக்கறை கொண்டு இருந்தார் அபிஷேக். அவர் வீட்டில் தங்கி இருந்த அந்த நாட்களுக்கு பின்னர் தான் ரிங்கு சிங் ஃபார்முக்கு வந்தார். 2022 ஐபிஎல் தொடரிலேயே கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக ரன் குவித்தார். பின்னர் 2023 ஐபிஎல் தொடரில் உச்சம் தொட்டு விட்டார். அதைத் தொடர்ந்தே இந்திய அணியிலும் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது.
அபிஷேக் நாயர் கிரிக்கெட் வீரராக சாதித்ததை விட பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயரை பெற்றவர். குறிப்பாக தினேஷ் கார்த்திக் இந்திய அணியிலும் இடம் பெற முடியாமல், ஐபிஎல் தொடரிலும் சரியாக செயல்படாமல் தவித்த போது, அவரை ஃபினிஷராக மாற்ற கடும் பயிற்சி அளித்தார். தினேஷ் கார்த்திக் பின்னர் ஃபினிஷராக இந்திய டி20 அணியிலும் கூட வாய்ப்புகளை பெற்றார். அதே போலவே பின்னர் ரிங்கு சிங்கிற்கு வேண்டிய உதவிகளை செய்து இந்திய அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு அவர் உயர காரணமாக இருந்திருக்கிறார்.