மும்பை : இந்திய டி20 அணியில் ரிங்கு சிங் தான் ஆடும் அனைத்து போட்டிகளிலும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து தன்னை நிரூபித்து இருக்கிறார்.
தற்போது அவர் ஆடிய ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஃபினிஷராக இறங்கி 3 இன்னிங்க்ஸில் 99 ரன்கள் சேர்த்துள்ளார். இரண்டு முறை நாட் அவுட் ஆக இருந்திருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 190 ஆகும். அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்துள்ளார். ஒவ்வொரு முறையும் அணிக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்தார்.

அதனால், இனி அவர் டி20 அணியில் அசைக்க முடியாத வீரராக இருப்பார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டு இருக்கும் அதே வேளையில் பிசிசிஐ அடுத்த கட்ட திட்டத்தை தயார் செய்து வருகிறது. அதன்படி ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் இருந்து நேராக டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பங்கேற்க உள்ளார்.
ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினால் அவர் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்வார். ரிங்கு சிங் இப்போது அந்த இடத்தில் தான் இறங்கி வருகிறார். ஃபினிஷர் என்ற ஒரு இடத்தை விட்டு, மற்ற பேட்ஸ்மேன்களை கணக்கிட்டால், ரிங்கு சிங்கிற்கு அணியில் இடம் கிடைக்காது என தெரிகிறது.
துவக்க வீரர் இருவர், அதன் பின் மூன்றாம் வரிசையில் கோலி அல்லது ஸ்ரேயாஸ் ஐயர், அடுத்து சூர்யகுமார் யாதவ், அதன் பின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இறங்க வேண்டும். அதன் பின் ஆறாவது இடத்தில் தான் ஃபினிஷர் இறங்க வேண்டும். ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினால் அவருக்கு தான் அந்த இடம் கிடைக்கும். அவர் ஆல் - ரவுண்டர் என்பதால் அவருக்கே அணியில் முன்னுரிமை அளிக்கப்படும்.
அதன் பின் ஐந்து பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற வேண்டும் என்பதால் ஏழாம் வரிசை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. எனவே, தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடினாலும் ரிங்கு சிங்கிற்கு அணியில் இடம் நிரந்தரம் இல்லை என்பதே உண்மை. பிசிசிஐ தொடர்ந்து அணியை மாற்றி வருவதாலேயே இந்த குளறுபடிகள் நடந்து வருகிறது.