சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் அடுத்தடுத்து பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கின்றனர். இதனால் இந்திய அணி 120 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். சிட்னி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்த முடிவை இந்திய அணி எடுத்தது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் ராகுல் 4 ரன்களிலும், ஜெய்ச்வால் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த சுப்மன் கில் 20 ரன்களிலும், விராட் கோலி 17 ரன்களிலும் ஆட்டமிழக்க, இந்திய அணி 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிட்சில் அதிகளவில் புற்கள் இருந்ததும், கூடுதல் பவுன்ஸ் இருந்ததும் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு எமனாக மாறியது. இதன்பின் ரிஷப் பண்ட் - ஜடேஜா கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தேநீர் இடைவேளை வரை விக்கெட் கொடுக்காமல் ஆடிய இருவரும் இந்திய அணியின் ஸ்கோரை 107 ரன்களுக்கு உயர்த்தினர். அதுவரை நிதானம் காத்த ரிஷப் பண்ட் தேவையில்லாமல் எந்த ஷாட்டிற்கும் செல்லவில்லை. அதேபோல் தலை மற்றும் தொடை பகுதிகளில் அதிகமாக அடி வாங்கி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இதனை பார்த்த சுனில் கவாஸ்கரே வர்ணனையில் ரிஷப் பண்ட்-ஐ பாராட்டினார்.
தேநீர் இடைவேளைக்கு பந்து தேய்மானம் அடைந்த நிலையில், ரிஷப் பண்ட் கொஞ்சம் கொஞ்சமாக ரன் குவிப்பை விரைவுபடுத்தினார். அதேபோல் ஆஸ்திரேலியா அணி ஸ்காட் போலண்ட்-ஐ ஒருமுனையில் பவுலிங் செய்ய வைத்து, இந்திய அணியை ரன் குவிக்கவிடாமல் தடுத்தது. ஒரு கட்டத்தில் போலண்ட்-ஐ அட்டாக் செய்ய முடிவு எடுத்தார் ரிஷப் பண்ட்.
அப்போது போலண்ட் கொஞ்சம் எக்ஸ்டா பவுன்ஸில் பந்தை வீச, அது எய்ஜாகி உயர பறந்தது. அதனை கம்மின்ஸ் எளிதாக கேட்ச் பிடிக்க, ரிஷப் பண்ட் 97 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி அடுத்த பந்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்டில் நிதிஷ் ரெட்டி சதம் விளாசி அசத்தி இருந்தார்.
ஆனால் போலண்ட் பவுலிங்கில் இம்முறை முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இதனால் இந்திய அணி 120 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அதேபோல் இந்த இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக, ஸ்காட் போலண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 35 வயதாகும் ஸ்காட் போலண்ட் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக வயதில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.