சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 33 பந்துகளில் 61 ரன்கள் குவித்து மிரட்டினார். அவர் நான்கு சிக்ஸ் மற்றும் ஆறு ஃபோர் அடித்து ஆஸ்திரேலிய அணியை அலற விட்டார். 78 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்த நிலையில் சற்றும் யோசிக்காமல் அதிரடி ஆட்டம் ஆடினார் ரிஷப் பண்ட்.
29 பந்துகளில் அரை சதம் அடித்த ரிஷப் பண்ட், 130 ஆண்டு கால சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார். மேலும், இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட அரை சதங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் ஆக்கிரமித்தார்.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 181 ரன்களும் எடுத்து இருந்தன. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்து இருந்தார். அதுவே முதல் இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி ஆட்டம் இழந்த பின் களத்துக்கு வந்த பண்ட் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். அதன் பின்னும் அடங்காத காளையாக ஆடிய ரிஷப் பண்ட் ஆறு ஃபோர் மற்றும் நான்கு சிக்ஸ் அடித்தார். 29 பந்துகளில் அரை சதம் கடந்து அதிலும் மாபெரும் சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலியா மண்ணில் மிகக் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ரிஷப் பண்ட். சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பு 1895இல் இங்கிலாந்து வீரர் ஜான் பிரவுன் மெல்போர்னில் 33 பந்துகளில் அரை சதம் அடித்து இருந்தார். அந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
1975ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ராய் ஃபிரெடெரிக்ஸ் 33 பந்துகளில் அரை சதம் அடித்து அந்த சாதனையை சமன் செய்து இருந்தார். தற்போது ரிஷப் பண்ட் அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார். 29 பந்துகளில் அரை சதம் அடித்ததன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக அரை சதங்களில் இரண்டாவது இடத்தையும் பிடித்தார் பண்ட்.
இதற்கு முன்பு 2022ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 28 பந்துகளில் ரிஷப் பண்ட் அரை சதம் அடித்திருந்தார். அதுவே இந்திய அணிக்காக அடிக்கப்பட்ட அதிவேக டெஸ்ட் அரை சதம் ஆகும். அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பண்ட் பிடித்து இருக்கிறார்.