சிட்னி: பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் அல்லது ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் இருவரில் ஒருவரே அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பர் என்று ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். அதேபோல் பவுலிங்கை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணியின் ஹேசல்வுட் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ளது. இதற்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்த டெஸ்ட் தொடரில் வெல்வது அவசியமான ஒன்றாக அமைந்துள்ளது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 19 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் அனுபவ வீரர் முகமது ஷமி மட்டும் காயம் காரணமாக விலகியுள்ளார். அதேபோல் இளம் வீரர்களான ஹர்சித் ராணா, நிதீஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு குறித்து ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பேசுகையில், இந்திய அணியின் பவுலிங்கில் முகமது ஷமி இல்லாதது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் மாதம் வரை முகமது ஷமி ஃபிட்னஸ் உடன் திரும்புவாரா என்ற குழப்பம் இருந்து வந்தது. இப்போது அவர் தேர்வு செய்யப்படாததால், அவர் ஃபிட்னஸ் உடன் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் இந்திய அணியால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியுமா என்ற சவால் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியால் நிச்சயம் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். மிகச்சிறந்த பேட்டிங் லைன் அப்பை வைத்திருக்கிறார்கள். அதேபோல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பதால், நிச்சயம் ஏதேனும் ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும். இருந்தாலும் ஆஸ்திரேலியா அணி கூடுதல் அனுபவத்துடன் இருக்கிறது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துவதும் எளிதானதல்ல. அதனால் ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் நிச்சயம் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அதிக ரன்களை எந்த வீரர் விளாசுவார் என்ற கேள்விக்கு, இரு வீரர்கள் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் இந்திய அணியின் ரிஷப் பண்ட் இருவரும் தான். ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் தனது பழைய பேட்டிங் வரிசையான நம்பர் 4க்கு செல்லவுள்ளார். அதனால் அவரின் பேட்டில் இருந்து அதிக ரன்கள் வரும். இன்னொரு பக்கம் ரிஷப் பண்ட் நம்பர் 5ல் களமிறங்கவுள்ளார். அவரின் ஃபார்முக்கு பழைய பந்து கிடைத்தால், என்ன நடக்கும் என்பது தெரியும்.
அதேபோல் பவுலிங்கை பொறுத்தவரை மிட்சல் ஸ்டார்க் 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவாரா என்ற சந்தேகம் உள்ளது. அதனால் ஹேசல்வுட் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று நினைக்கிறேன். அதேபோல் கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் ஹேசல்வுட் இருக்கிறார். பேட் கம்மின்ஸ், பும்ராவை காட்டிலும் ஹேசல்வுட் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று கூறியுள்ளார்.