மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஸ்பெஷலான வீரர் என்று முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டியுள்ளார். தோனியின் இடத்தை மிக விரைவாக ரிஷப் பண்ட் நிரப்பிவிட்டதாக கூறியுள்ள அவர், காபா இன்னிங்ஸ் மகத்தானது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய விக்கெட் கீப்பர்களை தோனிக்கு முன், தோனிக்கு பின் என்று பிரித்து கொள்ளலாம். ஏனென்றால் தோனிக்கு முன் இருந்த விக்கெட் கீப்பர்கள் பேட்டிங்கில் பெரியளவில் ஜொலிக்க முடியவில்லை. ஆனால் தோனிக்கு பின் விக்கெட் கீப்பராக இருப்பவர்கள் கட்டாயம் நிலையான பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும் என்ற தேவை வந்துவிட்டது. இதனால் வரும் காலத்தில் விக்கெட் கீப்பர்களுக்கு எந்த திண்டாட்டமும் இந்திய அணியில் இருக்காது.

ஏனென்றால் ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், துருவ் ஜுரெல், ஜித்தேஷ் சர்மா, அபிஷேக் போரெல், கேஎஸ் பரத் என்று எராளமானோர் இந்திய அணியின் 3 வடிவத்திலும் இடம்பிடிக்க தீவிரமாக போராடி வருகின்றனர். இதில் ரிஷப் பண்ட் மட்டுமே 3 வடிவங்களிலும் இடம்பிடித்து தோனிக்கு அருகில் வந்திருக்கிறார். 2014ஆம் ஆண்டு தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த போது, பல்வேறு கேள்விகள் எழுந்தன.
தோனியின் இடத்தை எந்த வீரரால் நிரப்ப முடியும் என்று விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் தோனியை விடவும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 6 சதங்கள், 14 அரைசதங்கள் உட்பட 2,693 ரன்களை விளாசி இருக்கிறார்.
ரிஷப் பண்ட் கொஞ்சம் ஸ்பெஷலான கிரிக்கெட் வீரர் தான். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டை மிக எளிமையாக கையாள்கிறார். மீன் எப்படி தண்ணீரில் நீந்துமோ, அப்படியொரு ஆட்டத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக எளிதாக வெளிப்படுத்துகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை அறிவித்த பின், அவரின் இடத்தை நிரப்ப இன்னும் சில காலங்கள் பிடிக்கும் என்று கருதினோம்.
அதற்காக தோனியின் இடத்தை ரிஷப் பண்ட் நிரப்பிவிட்டார் என்று சொல்லவில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் ஆட்டம் அமர்க்களமாக உள்ளது. ஆஸ்திரேலியா மண்ணில் கூட ரிஷப் பண்ட்-ஐ யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திய அணியின் மகத்தான வெற்றிகளில் ஒன்றான காபா டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் ஆட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவில் இருந்தது.
இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அத்தனை பேரும் காயமடைந்துவிட்டனர். ஆனால் 330 ரன்கள் இலக்கை நோக்கி விரைவாக இந்திய அணியை அழைத்து சென்றார். என்னை பொறுத்தவரை அழுத்தம் நிறைந்த தருணங்களில் அப்படியொரு ஆட்டத்தை விளையாடி ரிஷப் பண்ட் 89 ரன்கள் விளாசியது அற்புதமான இன்னிங்ஸ் என்று பாராட்டியுள்ளார்.