மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தலைவிதி ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் பேட்டிங்கில் தான் அடங்கியிருக்கிறது. ஆனால் ரிஷப் பண்ட் இதுவரை ஆடிய 5 இன்னிங்ஸில் வெறும் 87 ரன்களை மட்டுமே சேர்த்திருப்பது ரசிகர்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியின் தொடர் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்களை குவித்திருப்பதால், இந்திய அணியால் ஃபாலோ ஆனை தவிர்க்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் 2வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை மட்டுமே குவித்துள்ளது.

ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்காக 110 ரன்கள் தேவைப்படும் சூழலில், கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கிறது. இதனால் இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் ரிஷப் பண்ட் - ஜடேஜா இருவர் மீது தான் இருக்கிறது. வழக்கமாக வெளிநாடுகளில் ரிஷப் பண்ட் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றாலும், இந்த டெஸ்ட் தொடரில் அவர் ஃபார்முக்கு வர முடியாமல் திணறி வருகிறார்.
இதுவரை விளையாடிய 5 இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் வெறும் 87 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் ரிஷப் பண்ட் அட்டாக் செய்கிறேன் என்று விரைவாக விக்கெட்டை பறிகொடுத்து சென்றுவிடுவாரோ என்ற கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் ஏற்கனவே 2022ஆம் ஆண்டு ஒருமுறை ஜடேஜா - ரிஷப் பண்ட் கூட்டணி இந்திய அணியை மீட்டெடுத்துள்ளது.
எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருவரும் இணைந்து 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். SENA நாடுகளில் ஜடேஜா அடித்த ஒரே சதம் அதுதான். இதனால் நாளை மீண்டும் ஜடேஜா - ரிஷப் பண்ட் கூட்டணி அப்படியொரு ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஜடேஜா நிலைத்து நின்று ரன்கள் சேர்ப்பதில் வல்லவர்.
இதனால் முதல் 15 ஓவர்களுக்கு மட்டும் கொஞ்சம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே, இருவரும் பெரிய ஸ்கோரை எடுக்க முடியும். அதேபோல் பேட் கம்மின்ஸ்-க்கு இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு பவுலிங் செய்ய சிரமங்களை சந்தித்துள்ளார். கடந்த சில போட்டிகளில் ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்தி இருந்தாலும், இம்முறை அவரிடம் கவனமாக விளையாடினாலே ரிஷப் பண்ட் எளிதாக பெரிய ஸ்கோரை அடிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.