சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இடத்தில் துருவ் ஜுரெலை கொண்டு வர பயிற்சியாளர் கம்பீர் முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மெல்போர்ன் மைதானத்தில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்-ன் பொறுப்பில்லாத ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. முதல் இன்னிங்ஸில் 28 ரன்கள் எடுத்திருந்த போது, தேவையில்லாத ஷாட் ஒன்றை ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார்.

அப்போதே இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், முட்டாள்.. முட்டாள்.. முட்டாள் என்று கடுமையாக விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் 104 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ட்ராவிஸ் ஹெட் வீசிய பந்தில் சிக்சர் அடிக்க முயன்று ரிஷப் பண்ட் விக்கெட்டை பறிகொடுத்தார். கிட்டத்தட்ட ஒரு செஷன் முழுவதும் போராடி பேட்டிங் ஆடிய ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்தது.
ஆனால் டிராவை நோக்கி செல்வதை கூட புரிந்து கொள்ளாமல் ரிஷப் பண்ட் தேவையில்லாமல் சிக்ஸ் அடித்து ஆட்டமிழந்தார். இதனால் டென்ஷனான கம்பீர் ஓய்வறையில் பேசும் போது, ஓய்வறையில் இருக்கும் போது நான் சொல்லும் திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டு, களத்தில் வேறு திட்டத்திற்கு ஏற்ப விளையாடுவது சரியா.. அதனை தங்களின் இயல்பான ஆட்டம் என்று வேறு சொல்லிக் கொள்கிறீர்கள் என்று கடிந்து கொண்டார்.
அதேபோல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதோடு சில நேரங்களில் சூழலையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று கம்பீர் பேசி இருந்தார். இந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை அடிக்கும் வீரராக ரிஷப் பண்ட் இருப்பார் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரிஷப் பண்ட் 4 போட்டிகளில் விளையாடி வெறும் 154 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
அதில் 5 இன்னிங்ஸில் நல்ல தொடக்கம் கிடைத்த போதும், ரிஷப் பண்ட்-ஆல் அதனை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. அதில் ரிஷப் பண்ட்-க்கு ஓய்வு கொடுக்க பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அவரது இடத்தில் பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆடிய துருவ் ஜுரெலை களமிறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் துருவ் ஜுரெல் 80 மற்றும் 68 ரன்களை விளாசினார். ஆனால் பெர்த் டெஸ்டில் 11 மற்றும் 1 ரன்களை மட்டுமே ஜுரெல் சேர்த்தார். இதனால் ரிஷப் பண்ட்-ன் இடத்தை துருவ் ஜுரெல் நிரப்புவாரா என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.