மும்பை: இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்டை நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறி இருக்கிறார். இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 0 - 3 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
இதுவரை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத இந்த மோசமான படுதோல்வியை அடுத்து இந்திய அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் எழுந்து உள்ளன. ரோஹித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கும் நிலையில், அவருக்கு அடுத்த கேப்டனை இப்போதே நியமிக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.

தற்போது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக பும்ரா இருக்கிறார். எனினும், அவரை விடவும் ரிஷப் பண்ட் தான் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என முகமது கைஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருக்கிறார். இது பற்றி கைஃப் பேசுகையில்,
"இப்போது இருக்கும் இந்திய அணியில் டெஸ்ட் அணியின் கேப்டன் ஆகும் தகுதி ரிஷப் பண்ட்டுக்கு உள்ளது. அவர் அதற்கு தகுதியானவர். அவர் எப்போது விளையாடினாலும் இந்திய அணியை முன் வைத்து விளையாடுகிறார். எந்த வரிசையில் பேட்டிங் இறங்கினாலும் போட்டியை வென்று கொடுக்கும் ஆட்டத்தை ஆடுவதற்கு தயாராக இருக்கிறார்."
"இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா என எந்த நாடாக இருந்தாலும், எந்த சூழ்நிலையாக இருந்தாலும் ரன் குவிக்கிறார். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமோ, அல்லது வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமோ எல்லாவற்றிலும் ரன் சேர்க்கிறார். ஒரு முழு பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார்."
"ரிஷப் பண்ட் தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆடும்போது ஒரு ஜாம்பவானாக ஓய்வு பெறுவார். அதற்குரிய ஆட்டத்தை அவர் ஏற்கனவே வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது விக்கெட் கீப்பிங் வெகுவாக முன்னேறி இருக்கிறது. அவர் களத்தில் இருக்கும் வரை நியூசிலாந்து அணியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இப்போது இருக்கும் அணியில் எதிர்கால இந்திய அணி கேப்டன் யார் என்று பார்த்தால் அது நிச்சயம் ரிஷப் பண்ட் தான். ரோஹித் சர்மாவுக்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாகும் தகுதி அவருக்கு உள்ளது." இவ்வாறு முகமது கைஃப் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தது ரிஷப் பண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று போட்டிகளையும் வென்ற நியூசிலாந்து அணி வீரர்களை காட்டிலும் ரிஷப் பண்ட் அதிக ரன்கள் சேர்த்து இருந்தார். அவர் மூன்று போட்டிகளில், ஆறு இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 261 ரன்கள் சேர்த்து இருந்தார்.