மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முட்டாள்தனமான ஷாட்டை விளையாடி விக்கெட்டை பறிகொடுத்திருப்பதாக இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ரிஷப் பண்ட்-ன் இந்த ஷாட் அவரின் இயல்பான ஷாட் அல்ல என்று கூறியுள்ள அவர், சூழலை புரிந்து ரிஷப் பண்ட் விளையாட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2வது நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ரிஷப் பண்ட் - ஜடேஜா இருவரும் 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்திய அணியின் ரிஷப் பண்ட் தொடக்கத்திலேயே அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.

அவருக்கு நல்ல தொடக்கம் கிடைத்த நிலையில், ஆட்டத்தில் இந்திய அணியின் கைகள் ஓங்கியது. எளிதாக ஃபாலோ ஆனை தவிர்த்து ஆஸ்திரேலியா அணியின் முன்னிலையை தகர்க்க முடியும் என்று பார்க்கப்பட்டது. அந்த நேரத்தில் ஸ்காட் போலண்ட் வீசிய பந்தில் ரிஷப் பண்ட் தேவையில்லாத ஷாட் ஒன்றை விளையாடி 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே 5 இன்னிங்ஸில் 87 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், சிறந்த தொடக்கம் கிடைத்த போது ரிஷப் பண்ட் சொதப்பி இருக்கிறார். இதுகுறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், இந்த ஷாட் முழுக்க முழுக்க முட்டாள்தனமானது. ரிஷப் பண்ட் அந்த ஷாட்டை ஆடுவார் என்று 2 ஃபீல்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அப்படியொரு ஷாட்டை விளையாட முயன்று தவறவிட்டுள்ளார். இறுதியாக அதே ஷாட்டை விளையாடி தேர்ட் மேன் திசையில் நின்ற லயனிடம் கேட்சாகி இருக்கிறார். என்னை பொறுத்தவரை ரிஷப் பண்ட் தனது விக்கெட்டை ஆஸ்திரேலியாவின் கைகளுக்கு தூக்கி கொடுத்துள்ளார். இதுபோன்ற சூழலில் இந்திய அணி விக்கெட்டை கொடுக்க கூடாது. ஒரு பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் சூழலை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இதனை ரிஷப் பண்ட்-ன் இயல்பான ஆட்டம் என்று யாரும் சொல்ல வேண்டாம். அதனை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது அவரின் இயற்கையான ஆட்டமல்ல. முட்டாள்தனமான ஷாட். இந்த ஷாட் மூலமாக இந்திய அணியையும் அவர் பின்னோக்கி இழுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.