மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவிடம் பெண் ஒருவர் கில் எங்கே என கேட்டதற்கு அவர் அளித்த பதில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறார்கள்.
இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. இந்த சூழலில் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. இந்த சூழலில் கடந்த முறை அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்கள் பயிற்சி செய்வதை பார்க்க ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது.

அப்போது பல ரசிகர்களும் திரண்டு இந்திய வீரர்களை கேலி செய்து கவனத்தை சிதறடித்தனர். இதனால் கடுப்பான பிசிசிஐ, இந்திய வீரர்கள் பயிற்சி செய்வதை இனி ரசிகர்கள் பார்க்க அனுமதி அளிக்கக்கூடாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் வலியுறுத்தி இருந்தது.
இதனை அடுத்து மெல்போர்னில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்ட திட்டம் ரத்து செய்யப்பட்டது. எனினும் இதனையும் மீறி இந்திய வீரர்கள் பயிற்சி செய்வதை அறிந்து பல ரசிகர்கள் அங்கு திரண்டனர். அதில் பெண் ரசிகை ஒருவர் ரோகித்! ரோகித்! என கத்தினார். ரோகித் சர்மாவும் ஏதோ நமது ரசிகை தான் நம்மை அழைக்கிறார் என்று பார்த்தார்.
ஆனால் அந்த ரசிகை சுப்மன் கில்லை அழைக்க முடியுமா என்று கேட்டார். இதனால் கடுப்பான ரோகித் நான் எங்கே சென்று அவரை அழைத்து வருவது என்று கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. பலரும் ரோகித் சர்மாவை பார்த்து நீங்கள் என்ன நினைத்துக் கொண்டீர்கள் என அந்த பெண் ரசிகைக்கு கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள அந்த பெண் தான் கில்லின் மிகப்பெரிய ரசிகை என்றும், தனது கால் முறிவு ஏற்பட்டதையும் மீறி மைதானத்திற்கு வந்து இந்திய வீரர்களை பார்க்க முயற்சித்ததாகவும், ஆனால் தம்மால் சுப்மன் கில்லை பார்க்க முடியவில்லை என்றும், இதனால் தமக்கு அழுகையாக வருவதாகவும் கூறி இருக்கிறார். கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் ஒரு கம்பேக் கொடுப்பார் என்றும் அந்த பெண் நம்பிக்கை அளித்து இருந்தார்.