பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகுவதாக பிசிசிஐ-இடம் தெரிவித்து இருக்கிறார். கடந்த நவம்பர் 15 அன்று ரோஹித் சர்மாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததை அடுத்து நவம்பர் 22 அன்று துவங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் இந்திய அணியுடன் இணைவார் என கூறப்பட்டது. ஆனால், இரண்டாவது குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருக்கும் ரோஹித் சர்மா ஒரு வாரத்துக்கு மேலாக தனது குடும்பத்தினருடன் செலவிட முடிவு செய்து இருப்பதாகவும், முதல் டெஸ்ட் போட்டியின் போது விடுப்பு எடுத்துக் கொண்டு, இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பங்கேற்க விரும்புவதாகவும் பிசிசிஐ-இடம் தெரிவித்து இருக்கிறார்.

பிசிசிஐ உயர் அதிகாரிகளும் அதற்கு ஒப்புக் கொண்டு இருக்கின்றனர். எனவே, ரோஹித் சர்மா இப்போதைக்கு ஆஸ்திரேலியாவுக்கு செல்ல மாட்டார் என கூறப்படுகிறது. சுப்மன் கில் விரலில் ஏற்பட்ட காயத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியாது என கூறப்படும் நிலையில் ரோஹித் சர்மா விலகல் செய்தியும் உறுதியாகி இருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் முகாமிட்டு இருக்கும் இந்திய அணி வீரர்கள், பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகின்றனர். அந்தப் பயிற்சிப் போட்டியின் போது தான் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், கே எல் ராகுலுக்கும் முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், முதல் போட்டியில் ராகுல் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் கிடைத்து இருப்பது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இடத்தில் யாரை ஆடவைப்பது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், விராட் கோலிக்கும் காயத்துக்காக ஸ்கேன் எடுக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு என்ன மாதிரியான காயம் உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. அவரால் போட்டியில் பங்கேற்க முடியுமா? என்பது பற்றியும் எந்த தகவலும் வெளியாகவில்லை. எனவே, இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.