அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா செய்த பெரிய தவறு ஒன்றை சுட்டிக்காட்டி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அனுபவ வீரர்களான சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவை கேப்டன் ரோஹித் சர்மா சரியாகப் பயன்படுத்தாதது குறித்து ரசிகர்கள் மத்தியிலும், முன்னாள் வீரர்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அப்போது ரோஹித் சர்மா விடுப்பில் இருந்தார். தற்காலிக கேப்டன் பும்ரா தலைமையில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியின் போது அணிக்கு திரும்பிய ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பையும் ஏற்றார். அவரது தலைமையில் ஆடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்திய அணி கேப்டன், பவுலர்களை சரியாக பயன்படுத்தாதது தான் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
ஒரு கேப்டனாக ஆஸ்திரேலிய அணிக்கு எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது இந்திய அணியால் விரைவாக விக்கெட்களை வீழ்த்த முடியவில்லை. பும்ரா மட்டுமே ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் வகையில் பந்து வீசி இருந்தார்.
இந்த நிலையில் இரண்டாவது நாளின் துவக்கத்தில் பும்ராவுக்கு அதிக ஓவர்கள் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. அவருக்கு நான்கு ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதன் பின் முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் நீண்ட நேரம் பந்து வீசினர்.
அதேபோல அனுபவ சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை அடிலெய்டு போட்டியில் தேர்வு செய்ததற்கு முக்கிய காரணமே அவர் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்கள் வீழ்த்தி இருந்ததுதான். அந்த போட்டியில் அவர் புதிய பந்தில் பவுலிங் செய்து 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
அவரை விக்கெட் வீழ்த்துவதற்காக தான் அணியில் தேர்வு செய்து இருக்கிறார்கள் என்றால் புதிய பந்தில் அவருக்கு பந்து வீச வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா அதை செய்யவில்லை. அஸ்வின் நீண்ட நேரம் கழித்து தான் பந்து வீச அழைக்கப்பட்டார். அஸ்வின் மீது நம்பிக்கை இல்லை என்றால் அவரை ஏன் அணியில் எடுக்க வேண்டும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முதல் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருந்த சுழற் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தரையே இந்த போட்டியிலும் ஆட வைத்திருக்கலாம். விக்கெட் வீழ்த்துவார் என்ற ஒரே காரணத்துக்காக அஸ்வினை எடுத்துவிட்டு, முதல் நாள் அன்று இந்திய அணி வீசிய 33 ஓவர்களில் அவருக்கு ஒரு ஓவர் மட்டும் அளித்தது மிகப் பெரிய தவறாக அமைந்தது.
இரண்டாவது நாள் ஆட்டத்திலும் 15 ஓவர்கள் சென்ற பின்னர் தான் அஸ்வினுக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதல் இடைவேளைக்குப் பின் பும்ரா மற்றும் அஸ்வின் இணைந்து பந்து வீசியபோதுதான் ஆஸ்திரேலிய அணி விக்கெட்களை இழக்கத் தொடங்கியது. அதை முன்பே செய்திருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் ஏற்பட்டு 200 ரன்களுக்குள் ஆல் - அவுட் ஆகி இருக்கக்கூடும்.
அந்த வகையில் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அச்சுறுத்தும் வகையிலான வியூகத்தை செயல்படுத்தவில்லை. அவரது ஃபீல்டிங் அமைப்பும் அச்சுறுத்தும் வகையில் இல்லை. இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு ரோஹித் சர்மாவின் கேப்டன்சி முக்கிய காரணமாக அமைந்துள்ளது.