சிட்னி: இந்திய அணியில் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் இடையே விரிசலில் இருந்து உள்ளதாக ஒரு தகவல் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகியதாக கூறப்பட்டது.
ரோஹித் சர்மா அணியில் இடம் பெற மாட்டார் என முதலில் தகவல் வெளியானது. அதன் பின்பு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் அளிக்கப்படுமா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பிளேயிங் லெவனை போட்டிக்கு முன் முடிவு செய்வோம் எனக் கூறி இருந்தார்.

இதன் மூலம் கம்பீர்தான் ரோஹித் சர்மா ஆட வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்யும் இடத்தில் இருக்கிறார் என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால், ரோஹித் சர்மா நீக்கப்பட்டாரா அல்லது அவராகவே விலகினாரா என்ற குழப்பம் நீடித்து வந்தது.
இந்த நிலையில் தான் ரோஹித் சர்மா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது தான் சரியாக ரன் குவிக்காததால் ஐந்தாவது போட்டியில் இருந்து விலகியதாக தெரிவித்தார். அவர் இந்த பேட்டியை கொடுப்பதற்கான காரணம் என்ன? என்பது பற்றி ஒரு தகவல் கூறப்படுகிறது.
கவுதம் கம்பீர் தான் அணியை நிர்வகிக்கிறார், அணியில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் அவரே பொறுப்பு என்பது போன்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. அதை ரோஹித் சர்மா விரும்பவில்லை. குறிப்பாக தனது விஷயத்தில் கவுதம் கம்பீர் தான் முடிவு எடுக்கிறார் என வெளியான செய்திகளை ரோஹித் சர்மா ரசிக்கவில்லை.
வெளி உலகுக்கு அதை தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு ஐந்தாவது போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே பேட்டி அளித்தார் எனக் கூறப்படுகிறது. அந்தப் பேட்டியில் அழுத்தம் திருத்தமாக அணியின் நலனை கருத்தில் கொண்டு தானே விலகியதாக ரோஹித் சர்மா தெரிவித்தார்.
தான் ஓய்வு பெறவில்லை எனவும் ரோஹித் சர்மா விளக்கம் அளித்தார். ஆனால், உண்மையில் ரோஹித் சர்மாவுக்கு இனி டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படாது எனக் கூறப்படுகிறது. அப்படி இருக்கும்போது ரோஹித் சர்மா, தான் ஓய்வு பெறவில்லை எனக் கூறி இருப்பது தன்னை பற்றிய பிம்பம் ரசிகர்கள் மத்தியில் உடைந்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே.
கவுதம் கம்பீருக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை ரோஹித் சர்மா எடுத்ததால் தான் இப்படி பேசி இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணியில் கவுதம் கம்பீரால் பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியின் முடிவில் மற்றொரு மூத்த வீரரான சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விடை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் ஓய்வை அறிவிப்பதாக இருந்தால் தொடரின் முடிவில் அறிவித்திருக்கலாம். ஆனால், பாதியிலேயே அவர் ஓய்வை அறிவித்து விட்டு சென்றது ஏன்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதற்கும் கவுதம் கம்பீர் காரணமாக இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.