செண்ட் லூசியா : ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டில் அடித்து எட்ஜாகி பந்தை கேட்ச் பிடிக்க தவறிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-ஐ, ரோகித் சர்மா கோபத்தில் திட்டிய சம்பவம் களத்தில் அரங்கேறியுள்ளது. இதனால் ரோகித் சர்மா வெற்றிபெற வேண்டும் என்று எவ்வளவு தீவிரமாக இருக்கிறார் என்று ரசிகர்கள் உணர்ந்து பாராட்டி வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 206 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 41 பந்துகளில் 8 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 92 ரன்களை விளாசினார். இதன் பின் இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் - ட்ராவிஸ் ஹெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே டேவிட் வார்னர் 6 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் களமிறங்கினார். இதனைத் தொடர்ந்து 2வது ஓவரை வீச பும்ரா வந்தார். இந்த ஓவரின் 4வது பந்தில் மிட்சல் மார்ஷ் கிளவ்ஸில் அடித்து பந்து மேலே எழுந்தது. அதனை பிடிக்க ரிஷப் பண்ட் வேகமாக ஓடிய போது, திடீரென தடுமாறி கேட்ச் பிடிக்க முடியாமல் கோட்டைவிட்டார்.
ரிஷப் பண்ட் நிதானமாக ஓடி வந்திருந்தாலே எளிதாக அந்த கேட்சை பிடித்திருக்க முடியும். ஆனால் அவர் கவனத்தை கேட்ச் மீது வைக்காததாலேயே சரியாக பந்தை பிடிக்க ஓடி வரவில்லை. இதனால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆக்ரோஷமாக கத்தினார். ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று மைதானத்தில் இருந்தவர்களே மிரண்டு போயினர். ஏனென்றால் ரோகித் சர்மா எந்த சூழலிலும் தனது கோபத்தை வெளிப்படுத்த மாட்டார்.
ஆனால் ஃபேரவைட் பிளேயரான ரிஷப் பண்ட்-ஐ ரோகித் சர்மா கோபமாக கத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பும்ரா ஓவர் முடிவடைந்த போது, நேரடியாக ரிஷப் பண்ட் அருகில் சென்ற ரோகித் சர்மா, உயிரைக் கொடுத்தாவது டைவ் அடித்து கேட்சை பிடித்திருக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார். இது ரோகித் சர்மா இந்த வெற்றியை பெற எவ்வளவு தீவிரமாக உள்ளார் என்பது ரசிகர்களுக்கும் புரியும் வகையில் அமைந்தது.