பிரிஸ்பேன்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது இன்னிங்ஸ் முடிந்தவுடன் ஓய்வறைக்கு செல்லும் முன் தனது கிளவுஸை புல் தரையில் அவிழ்த்து வைத்து விட்டு சென்றார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரோஹித் சர்மா இந்த போட்டியுடன் ஓய்வை அறிவிக்க போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. நேற்றைய தினம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அணியில் துணை கேப்டன் பும்ரா தான் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. அவர் விடுப்பில் இருந்தார்.
அவருக்கு பதிலாக அந்த போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். பும்ரா மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். பும்ராவின் தனிப்பட்ட செயல்பாடு மட்டுமின்றி, அவரது கேப்டன்சியும் வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாவது போட்டியின் போது கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பினார். அந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. மறுபுறம் ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட பேட்டிங் செயல்பாடும் மோசமாகி கொண்டே சென்றது.
இரண்டாவது போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் அவர் முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்து ஓய்வறையை நோக்கி சென்ற போது இடையே தனது கிளவுஸை புல் தரையில் அவிழ்த்து வைத்து விட்டுச் சென்றார்.
இனி பேட்டிங் செய்ய மாட்டேன் என்பதை குறிக்கும் வகையில் ரோஹித் சர்மா இவ்வாறு செய்து இருக்கிறாரா? அவர் ஓய்வை அறிவிக்கப் போகிறாரா? என்ற கேள்விகள் எழுந்து உள்ளன. இது பற்றி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பலரும் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவிக்க இதுதான் சரியான நேரம் என்றும் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஒருவேளை ரோஹித் சர்மா மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்தால் கடைசி இரண்டு போட்டிகளில் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டு தோனி இதேபோல ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின் இடையே தனது கேப்டன் பதவியில் இருந்து விலகி, டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வையும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.