மும்பை: இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில் ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை பும்ரா வசம் அளித்து விட்டு தன் சொந்த வேலைகளை பார்த்துக் கொள்ளட்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விளாசி இருக்கிறார்.
தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இதை ரோஹித் சர்மாவுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கூறி இருக்கிறார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அல்லது முதல் இரண்டு போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என கூறப்பட்டு வருகிறது. அவர் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருப்பதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இது பற்றி சுனில் கவாஸ்கர் ஒரு கிரிக்கெட் விவாத நிகழ்ச்சியில் பேசுகையில், ஒரு பெரிய தொடரின் முதல் போட்டியில் கேப்டன் ஆடுவது மிகவும் முக்கியம். இந்திய அணி தான் முக்கியம். ஆனால், அணியை விட சொந்த காரணங்கள் காரணமாக அவர் விலக முடிவு செய்தால் துணை கேப்டனை அணியின் கேப்டனாக அந்த தொடர் முழுவதும் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் துணை கேப்டனுக்கு அழுத்தம் அதிகரிக்கும் என்று கூறி இருக்கிறார்.
குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் சொந்த மண்ணில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் கேப்டன் இல்லாமல் ஒரு அணி அடுத்த டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டி வந்தால் அது அணிக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
2020 - 21 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இதே போல விராட் கோலி தொடரின் முதல் போட்டியில் மட்டுமே விளையாடி விட்டு விலகி இருந்தார். அதன் பின் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே தலைமையில் ஆடிய இந்திய அணி அந்த தொடரை வென்று இருந்தது. அந்த உதாரணத்தை தான் இப்போது கவாஸ்கர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இது பற்றி கவாஸ்கர் பேசுகையில், "கேப்டன் நிச்சயமாக விளையாட வேண்டும். அவர் காயத்தால் விளையாட முடியாமல் போனால் அது வேறு விஷயம். ஆனால், முதல் போட்டியில் கேப்டன் விளையாடவில்லை என்றால் அது அணியின் தற்காலிக கேப்டனுக்கு அதிக அழுத்தத்தை அளிக்கும். அது அத்தனை எளிது அல்ல. ரோஹித் சர்மா முதல் போட்டியில் விளையாட மாட்டார் என சில செய்திகளை நாம் பார்க்கிறோம். அவர் இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா? என்பதும் உறுதியாகவில்லை."
"அது உண்மை என்றால் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ரோஹித்திடம் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். "நீங்கள் என்ன செய்யப் போகிறீர்களோ செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஓய்வெடுக்க வேண்டுமானாலும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் தனிப்பட்ட விஷயம். ஆனால், இந்த தொடரில் நீங்கள் ஒரு வீரராக மட்டுமே விளையாட முடியும். நீங்கள் எப்போது வேண்டுமோ அப்போது அணியில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். ஆனால், இந்த தொடரில் துணை கேப்டனை நாங்கள் கேப்டனாக அறிவிக்கிறோம்." அஜித் அகர்கர் இவ்வாறு ரோஹித் சர்மாவிடம் சொல்ல வேண்டும்."
"நாம் நியூசிலாந்து அணிக்கு எதிராக 0 - 3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து இருக்கிறோம். எனவே, அடுத்த தொடரில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். கேப்டன் நிச்சயம் அந்த தொடர் முழுவதும் இருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் தான் மிகவும் முக்கியம். நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 - 0 என இந்தியா வென்று இருந்தால் அது முற்றிலும் வேறு விஷயம்." என்றார் சுனில் கவாஸ்கர்.