மும்பை: இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் சீசனுக்கு முன் உள்ளூர் தொடரான துலீப் ட்ராபியில் விளையாட மறுத்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. உள்ளூர் வீரர்களுடன் கிரிக்கெட் ஆட முடியாது என அவர்கள் மறுத்த விவகாரம் சூட்டை கிளப்பி உள்ளது.
வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டி இருந்ததால் அதற்கு முன் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் துலீப் டிராபி உள்ளூர் டெஸ்ட் தொடரை ஏற்பாடு செய்திருந்தது பிசிசிஐ.

அதில் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் மற்றும் உள்ளூர் அளவில் சிறப்பாக விளையாடி வரும் டெஸ்ட் வீரர்கள் அடங்கிய நான்கு அணிகளை தயார் செய்து தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. அதற்காக இந்திய டெஸ்ட் அணி வீரர்களிடம் ஒரு போட்டியிலாவது ஆட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. குறிப்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு மூத்த வீரர்களும் அந்த தொடரில் பங்கேற்க ஒப்புக் கொண்டு இருந்தனர்.
ஆனால். துலீப் ட்ராபி அணிகளை அறிவிக்கும் போது அதில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் அஸ்வின் பெயர் இடம் பெறவில்லை. ஜடேஜா பெயர் மட்டும் இடம் பெற்று இருந்தது. பின்னர் அவரும் விடுவிக்கப்பட்டார். அது ஏன்? என தற்போது தெரிய வந்துள்ளது. "உள்ளூர் வீரர்களுடன் ஆடுவதால் எந்த பயனும் இல்லை. அது எங்களுக்கு ஊக்குவிப்பாக இருக்காது." என ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி துலீப் ட்ராபியில் விளையாட மறுத்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.
அஸ்வினும் அதைத் தொடர்ந்து விலக முடிவு எடுத்திருக்கிறார். இவர்கள் மூவரும் ஆடாததால், ரவீந்திர ஜடேஜாவை கடைசி நேரத்தில் அணியில் இருந்து நீக்கி இருக்கிறது தேர்வுக் குழு. இதன் காரணமாகவே மூத்த வீரர்கள் நால்வரும் துலீப் டிராபி தொடரில் விளையாடவில்லை. அடுத்து நடந்த வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா எளிதாக வென்றதால் அவர்கள் எடுத்த முடிவு சரி என்பது போன்ற ஒரு எண்ணம் ஏற்பட்டது.
ஆனால், தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், மூன்றிலும் தோல்விகளை சந்தித்து இருப்பதை அடுத்து அவர்கள் நால்வரும் துலீப் ட்ராபியில் விளையாடாதது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா நியூசிலாந்து தொடரில் மிக மோசமாக செயல்பட்டு இருந்தனர்.
இந்த தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 93 ரன்களும், ரோஹித் சர்மா 91 ரன்களும் மட்டுமே எடுத்து இருக்கின்றனர். சுழற் பந்துவீச்சை சந்திக்க முடியாமல் அவர்கள் இருவரும் திணறியதும் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதே போல நியூசிலாந்து சுழற் பந்துவீச்சாளர்கள் இந்திய மண்ணில் எளிதாக விக்கெட்கள் வீழ்த்திய நிலையில் மூத்த சுழற் பந்துவீச்சாளரான அஸ்வின் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியதும் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.