மும்பை : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் முதல் நாள் ஆட்டம் மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டது.
ஐந்து நாட்களுமே மழை பாதிப்பு இருக்கும் என்பதால் இந்த போட்டி டிராவில் முடிவடையலாம் என தெரிகிறது. இந்த நிலையில் டாஸ் வீசப்பட்டபோது கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்வது மிகவும் தவறான முடிவு என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்தீவ் ஹைடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த தொடரையே தற்போது ஆஸ்திரேலியா வென்றுவிடும் என நினைக்கின்றேன். ஏனென்றால் இந்த டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியா தான் வெற்றி பெறப் போகிறார்கள். ஏனென்றால் டாசை வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் பலமுறை கூறியிருக்கின்றேன்.
ஆனால் கேப்டன் ரோகித் சர்மா தவறான ஒரு முடிவை எடுத்து விட்டார். ஏனென்றால் பிரிஸ்பேன் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். முதல் மூன்று நாட்கள் வரை இங்கு நன்றாக பேட்டிங் செய்யலாம். இந்த டெஸ்ட் போட்டியில் வெல்லும் அணிதான் தொடரையும் கைப்பற்றும். இனி இந்தியா அணிக்கு சாதகமான மைதானம் என்றால் அது சிட்னி தான்.
இந்த போட்டியிலும், மெல்போர்னில் நடைபெறும் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருக்கிறது என்று மேத்தீவ் ஹைடன் கூறியிருக்கிறார். குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பிறந்தவர் என்பதால் பிரிஸ்பேன் மைதானம் அவருக்கு அத்துப்பிடியாகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹைடன் பிரிஸ்பேனில் நான்கு சதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மழை மேகம் மூட்டம் இருந்ததால் முதலில் பந்து வீசுவது நல்ல வாய்ப்பாக இருக்கும் என நினைத்து ரோகித் சர்மா தவறான முடிவு எடுத்ததாக விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.