இவர் சிஎஸ்கே கேப்டன் என்பதுதான் பிரச்சனை.. இந்திய அணியில் இடம் இல்லை.. ருதுராஜை ஓரங்கட்டிய பிசிசிஐ
மும்பை: இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதன் பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. அந்த இரண்டு தொடர்களிலும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அவர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் மாற்றுத் துவக்க வீரராக இடம் பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அதே போல கடந்த ஆண்டு டி20 அணியில் இடம் பெற்று வந்த ருதுராஜ் கெய்க்வாட் எந்த காரணமும் இன்றி டி20 அணியில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டு இருந்தார். அவருக்கு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் இடம் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
ஆனால், அவருக்கு டி20 அணியிலும், டெஸ்ட் அணியிலும் இடம் அளிக்கப்படவில்லை. இதை அடுத்து அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது தான் இந்திய அணியில் இடம் கிடைக்காததன் காரணம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்ந்து இந்தியா ஏ போன்ற இரண்டாம் கட்ட அணிகளில் இடம் பெறுவதுடன் அந்த அணியின் கேப்டனாகவும் ருதுராஜ் நியமிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு தலைமை பண்பு இல்லை என்றால் பிசிசிஐ அவரை தொடர்ந்து இரண்டாம் கட்ட அணிகளுக்கு கேப்டனாக நியமிக்காது. அவரது தலைமை பண்பை பற்றி தெரிந்து இருந்தும், அவர் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையிலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
இந்திய அணியில் சிலரது இடத்தை பாதுகாப்பதற்காக ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் அளிக்கப்படவில்லையா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. பிசிசிஐ மீது சிஎஸ்கே ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
அதே சமயம், உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக நான்கு சதம் அடித்த அபிமன்யு ஈஸ்வரன் மாற்று துவக்க வீரராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியா செல்ல உள்ளார். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்டு இருக்கும் வாய்ப்பு ஒரு கண் துடைப்பு மட்டுமே என்ற பார்வையும் உள்ளது.


Click it and Unblock the Notifications