பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்திய வீரர்களுக்கு இடையே நடந்து வரும் பயிற்சி போட்டியில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக பேட்டிங் செய்தது தெரிய வந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை இந்தியா ஏ அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். பயிற்சி போட்டிக்கு பதிலாக பவுலர்கள், பேட்ஸ்மேன்கள் பிரிந்து கேம் டைம் கிடைக்க விளையாடி வருகின்றனர்.

இதன் முதல் நாள் ஆட்டத்தில் விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் தலா 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதேபோல் ரிஷப் பண்ட் 19 ரன்களிலும், துருவ் ஜுரெல் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்தியா ஏ அணியின் நட்சத்திர பவுலரான முகேஷ் குமார் பேட்ஸ்மேன்களை எளிதாக எட்ஜில் வீழ்த்தி ஆச்சரியம் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று 2வது நாளாக ஆட்டம் தொடர்ந்து வந்தது. இன்றைய ஆட்டத்தில் மாற்று தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்ட அபிமன்யூ ஈஸ்வரன் மீண்டும் ஸ்லிப் ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கியுள்ளார். சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட், ஹர்சித் ராணா வீசிய பவுன்சரில் அப்பர் கட் மூலமாக அபார சிக்ஸ் ஒன்றை விளாசியுள்ளார்.
அதேபோல் அஸ்வின் பந்தில் 2 சிக்சர்களும், மானவ் சுதார் பவுலிங்கில் ஒரு சிக்சரும் விளாசியதோடு, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேட்டிங் செய்திருக்கிறார். பின்னர் ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறிய சர்ஃபராஸ் கான் பேட்டிங் செய்வதற்கு உதவி செய்திருக்கிறார். ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் திணறிய நிலையில், தற்போது சூழலை புரிந்து விளையாட தொடங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் ஸ்லிப் திசையில் நின்று ஃபீல்டிங் செய்த போது காயமடைந்து இருக்கிறார். நேற்றைய ஆட்டத்தில் கேஎல் ராகுல் காயமடைந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் சுப்மன் கில் காயமடைந்து வெளியேறி இருக்கிறார். இதனால் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக சரியாக தயாராகுமா என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.