மக்காய்: ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா ஏ அணி மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலிய அம்பயர் ஷான் கிரைக் இந்த புகாரை முன் வைத்து போட்டியின் இடையே பந்தை மாற்றினார். மேலும், அம்பயர் முடிவை எதிர்த்து பேசிய இஷான் கிஷன் மீது புகார் அளிக்க இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தியா ஏ அணி, ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக ஆடி வந்த முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தன்று இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்தது. முன்னதாக இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 107 ரன்களும், ஆஸ்திரேலியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களும் எடுத்திருந்தன.

அடுத்து இந்தியா ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 312 ரன்கள் எடுத்து இருந்தது. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு 224 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா ஏ அணி வேகமாக முன்னேறி வந்தது. நான்காம் நாள் அன்று ஆஸ்திரேலியா ஏ அணியின் வெற்றிக்கு 86 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
அப்போது அம்பயர் ஷான் கிரைக் திடீரென பந்தை மாற்றினார். அது ஏன் என இந்தியா ஏ அணி வீரர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, "நீங்கள் பந்தை சுரண்டினீர்கள். அதனால் பந்தை மாற்றினேன். இது பற்றி எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. விளையாட்டை துவங்குங்கள்." என்றார். மீண்டும் இந்திய வீரர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது, "இதைப்பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. ஆட்டத்தை தொடருங்கள்." என மீண்டும் கண்டிப்பாக கூறினார். அப்போது விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், "இந்த புதிய பந்தில் தான் நாங்கள் ஆடவேண்டுமா? இது முட்டாள் தனமான முடிவு." என்றார். அதற்கு அம்பயர் ஷான் கிரைக், "நீங்கள் எதிர்த்து பேசி இருக்கிறீர்கள். உங்கள் மீது புகார் அளிக்கப்படும். இது சரியான செயல் அல்ல." என்றார்.
மீண்டும் பந்தை மாற்றுவது பற்றி இந்திய வீரர்கள் கேட்டபோது, "நீங்கள் செய்த காரியத்தால் தான் பந்தை மாற்ற வேண்டியதாகி விட்டது." என மீண்டும் இந்தியா ஏ வீரர்கள் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டை கூறினார் அம்பயர் ஷான் கிரைக். பின்னர் இந்தியா ஏ வீரர்கள் புதிய பந்துடன் விளையாடினர்.
ஆஸ்திரேலியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது பந்தை சேதப்படுத்திய புகார் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. யார் பந்தை சேதப்படுத்தியது என அம்பயர் கடைசி வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மேலும், இஷான் கிஷன் அம்பையரை எதிர்த்து பேசியதால் அவருக்கு தண்டனை அளிக்கவும் வாய்ப்பு உள்ளது.
மேலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பின் விதிகளின் படி எந்த ஒரு வீரர் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தி இருந்தாலும், அவருக்கு போட்டிகளில் ஆட தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் எந்த இந்திய வீரர் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறதோ அவர் ஆஸ்திரேலியாவில் இனி எந்த போட்டியிலும் விளையாட முடியாமலும் போகலாம்.