பெர்த்: இந்திய அணியுடனான பயிற்சி ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், இந்தியா ஏ அணியில் இருந்த நட்சத்திர வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்சன் உள்ளிட்டோர் நாடு திரும்ப உள்ளனர். இது தமிழக ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். வரும் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விலகி இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரிட் பும்ரா பொறுப்பை ஏற்கவுள்ளார்.

அதேபோல் இந்தியா ஏ அணி வீரர்களுடன் இணைந்து இந்திய அணி வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். இந்த பயிற்சியின் போது இந்திய அணியின் சீனியர் வீரர்களான கேஎல் ராகுல், சுப்மன் கில் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதில் கேஎல் ராகுல் இன்றைய பயிற்சியின் பேட்டிங் செய்ய வந்த நிலையில், சுப்மன் கில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்றே கூறப்பட்டு வருகிறது.
இதனால் இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரையும் இந்திய அணியுடன் பயணிக்க முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இந்திய வீரர்களுடனான பயிற்சி ஆட்டத்தில் இரு நாட்களிலும் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக செயல்பட்டதால், அவரையும் ஆஸ்திரேலியாவில் இருக்க வைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்றுடன் இந்திய அணியின் பயிற்சி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக இந்தியா ஏ அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் ஏறி இந்தியா வருவதற்காக பயணத்தை தொடங்கியுள்ளனர். விமானம் ஏறுவதற்காக ருதுராஜ் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் பேருந்தில் ஏறும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதனால் தமிழக ரசிகர்கள் சோகமடைந்து உள்ளனர். ஏனென்றால் ருதுராஜ் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாக வேண்டும் என்று நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். அதற்கான வாய்ப்பு ஆஸ்திரேலியா மண்ணில் இருந்த நிலையில், திடீரென நாடு திரும்புவதால் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இவர்களுடன் ஏனைய இந்தியா ஏ அணியின் வீரர்களும் பயணத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.