சென்னை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை அணி நிர்வாகம் கையாளும் விதம் குறித்து, முன்னாள் இந்திய தொடக்க வீரர் சடகோபன் ரமேஷ் தனது கடும் அதிருப்தியையும், விமர்சனத்தையும் பதிவு செய்துள்ளார். பல திறமைகள் இருந்தபோதிலும், சுந்தர் ஓரங்கட்டப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய சடகோபன் ரமேஷ், வாஷிங்டன் சுந்தரின் நிலையை விளக்க ஒரு கூர்மையான உவமையைப் பயன்படுத்தினார். "அவரால் (சுந்தர்) எல்லா வாகனங்களையும் ஓட்ட முடியும், ஆனால் இந்தத் தொடரில் அவருக்கு ஒரு சைக்கிள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்கத்தில் எதுவுமே ஓட்டத் தெரியாத பலருக்கு பைக்கும், பென்ஸ் கார்களும் கொடுக்கப்படுகின்றன."
"வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி இன்னும் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும். கடந்த போட்டியில் அவருக்குப் பந்துவீச வாய்ப்பளிக்கவில்லை, ஆனால் பேட்டிங்கில் முன்கூட்டியே இறக்கிவிட்டார்கள், அவரும் ஒரு நம்பமுடியாத இன்னிங்ஸை ஆடினார். இப்போது, இந்தப் போட்டியில் இறுதியாகப் பந்துவீச வாய்ப்பு கொடுத்தபோது, எட்டு பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்," என்று ரமேஷ் கூறினார்.

சடகோபன் ரமேஷின் இந்தக் குற்றச்சாட்டு, கடந்த சில போட்டிகளில் சுந்தருக்கு அளிக்கப்பட்ட குழப்பமான வாய்ப்புகளையே சுட்டிக்காட்டுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சுந்தருக்கு ஒரு ஓவர்கூட பந்துவீச வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனால், பேட்டிங் வரிசையில் அவருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அவர், 23 பந்துகளில் 49* ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
அடுத்து 4வது டி20 போட்டியில், டெத் ஓவர்கள் வரை சுந்தரை பந்துவீச அழைக்காமல் அணி நிர்வாகம் தாமதப்படுத்தியது. ஆனால், இறுதியாக வாய்ப்பு கிடைத்தபோது, வெறும் 8 பந்துகளில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இந்தியாவின் 48 ரன்கள் வெற்றிக்கு அவரது இந்த பந்துவீச்சு முக்கியக் காரணமாக அமைந்தது.
சுந்தரின் டி20 புள்ளிவிவரங்கள் சிறப்பாக உள்ளன. எனவே, அவருக்கு அணியில் அதிகப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது. அவரது பந்துவீச்சு சராசரி 22-க்கும் குறைவாகவும், எகானமி ரேட் 7-க்குக் குறைவாகவும் உள்ளது. அதே நேரத்தில், அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 130-ஐத் தாண்டியுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள், அவர் ஒரு முன்னணி ஆல்-ரவுண்டராகக் கருதப்பட வேண்டும் என்பதையே சுட்டிக் காட்டுகின்றன.
"நான்காவது டி20 போட்டியில் இந்தியா முக்கியமாகப் பந்துவீச்சால்தான் வென்றது. டி20 உலகக் கோப்பையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த எங்களிடம் ஒரு சிறப்பான பந்துவீச்சுக் குழு உள்ளது. ஆனால் பேட்டிங் 'பொறுத்திருந்து பார்ப்போம்' என்ற நிலையிலேயே உள்ளது. இந்தியாவிடம் ஒரு அச்சுறுத்தலான பேட்டிங் லைன்-அப் இருப்பதாக நான் உணரவில்லை. உலகக் கோப்பைக்கு முன் பேட்டிங் சீராகுமோ என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று ரமேஷ் கூறியுள்ளார்.