பெங்களூர்: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி சதம் விளாசி அசத்தியுள்ளார். சீனியர் வீரரான கேஎல் ராகுலுடன் இணைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 172 பந்துகளில் சதம் விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் துருவ் ஜுரெல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 420 ரன்களை விளாசி அசத்தியது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 194 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதனால் இந்திய அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் கேஎல் ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், நிதீஷ் குமார் ரெட்டி, படிக்கல் உள்ளிட்ட ஏராளமான அனுபவ வீரர் பேட்டிங் வரிசையில் இருந்தனர். இதன்பின் 2வது இன்னிங்ஸை 226 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணியை இந்திய பவுலர்கள் அசால்ட் செய்தனர்.
17 ரன்களுக்குள் டாப் 4 பேட்ஸ்மேன்களை காலி செய்த இந்திய ஏ அணி, பின்னர் மெக்ஸ்வீனி - பிலிப் ஆகியோரை வீழ்த்த சிறிது போராடியது. இறுதியாக 46.5 ஓவர்களில் 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய ஏ அணியின் வெற்றிக்கு 411 ரன்கள் தேவையாக இருந்தது. பின்னர் கேஎல் ராகுல் - ஜெகதீசன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் ஜெகதீசன் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் வந்த தேவ்தத் படிக்கல் மற்றும் மானவ் சுதார் தலா 5 ரன்களில் ஆட்டமிழக்க, சாய் சுதர்சன் களம் புகுந்தார். கேஎல் ராகுல் - சாய் சுதர்சன் கூட்டணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்கள் இருவரும் 178 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் சதம் அடித்து அசத்திய நிலையில், சாய் சுதர்சனும் சதத்தை எட்டினார். ஆனால் சதம் அடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே சாய் சுதர்சன் 172 பந்துகளில் ஒரு சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 100 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் தேர்வாகி இருக்கிறார்.
இந்திய அணியின் நம்பர் 3 பேட்ஸ்மேனாக சாய் சுதர்சன் நிச்சயம் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருண் நாயர் நீக்கப்பட்டுள்ள நிலையில், சாய் சுதர்சனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கலாம். அதற்கேற்ப ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடரிலேயே சாய் சுதர்சன் சிறந்த ஃபார்முக்கு திரும்பி இருப்பது ரசிகர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.