மும்பை : இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு வழங்கக்கூடாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக விளங்கும் பும்ராவுக்கு பணிச்சுமையை கண்காணித்து ஓய்வு வழங்க வேண்டும் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். போட்டி 2 நாட்களில் முடிவடைந்து விட்டதால், எதற்கு ஓய்வு வழங்க வேண்டும் என்று கவாஸ்கர் அண்மையில் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர், பும்ராவை தொடர்ந்து விளையாடு வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பும்ராவை இந்தியா விளையாடும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் பயன்படுத்த வேண்டும். இதை நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். ஏனென்றால் இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளில் விளையாடிய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பும்ரா வெறும் 34 சதவீத போட்டிகளில் மட்டும் தான் பங்கேற்று இருக்கிறார்.
34 சதவீதம் என்பது மிகவும் குறைவு. மற்ற வீரர்களை காட்டிலும் அவர் குறைந்த அளவிலே சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுகிறார். எனவே பும்ராவுக்கு பல போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டு இருக்கிறது என தெரிகிறது. பும்ராவை இது போன்ற பெரிய தொடருக்கு தான் நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தான் காலம் முழுவதும் நாம் நினைவில் வைத்திருப்போம்.
இருதரப்பு அணிகள் மோதும் போட்டிகளில் வேண்டுமானால் பும்ராவை சேர்க்காமல் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அந்தப் போட்டியில் என்ன நடந்தது என்பதை நாம் அடுத்த 48 மணி நேரத்தில் மறந்து விடுவோம். எனவே பும்ராவை 5 போட்டிகளில் பயன்படுத்த வேண்டும் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் வலியுறுத்தியுள்ளார். தற்போது இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்று கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில், இந்திய அணி இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தகுதி பெற முடியும்.