மெல்போர்ன்: நிதிஷ் குமார் ரெட்டியை இந்திய அணியில் பிளேயிங் லெவனில் சேர்ப்பது ரிஸ்க் என்று கூறிய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தற்போது அவரை இந்திய அணி நம்பர் 6 பேட்ஸ்மேனாக களமிறக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் சஞ்சய் மஞ்ச்ரேக்கரை பொளந்து கட்டி வருகின்றனர்.
இந்திய வர்ணனையாளர்களில் மும்பை லாபிக்கு அதிக ஆதரவை அளிப்பவர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தான். மற்ற மாநில வீரர்களை காட்டிலும் மும்பை வீரர்களுக்கு மட்டும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வெளிப்படையாக ஆதரவளித்துள்ள சம்பவங்கள் ஏராளம். அதேபோல் வீரர்களின் திறமையை கண்டறிவதிலும் அவருக்கு எப்போதும் சிக்கல் இருந்துள்ளது.

2019 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக கூட ஜடேஜாவை பிட்ஸ் அண்ட் பீசஸ் என்று விமர்சித்து சிக்கலில் மாட்டிக் கொண்டார். அதன்பின் ஜடேஜாவின் விஸ்வரூபத்தை உலகமே கண்டு வியந்தது. அதேபோல் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகம் செய்யப்பட்டு, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்தார்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், நிதிஷ் குமார் ரெட்டியை முழுமையான பேட்ஸ்மேனாக விளையாட வைப்பது மிகப்பெரிய ரிஸ்க். அவர் திறமையான வீரர் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதற்கான ஸ்பார்க்கை காட்டிவிட்டார். ஆனால் நிதிஷ் குமார் ரெட்டியை பிளேயிங் லெவனில் சேர்ப்பதால், இந்திய அணியின் பேலன்ஸ் சிக்கலுக்கு உள்ளாகிறது என்று கூறினார்.
அப்போது கூட நிதிஷ் குமார் ரெட்டி இந்திய அணிக்காக அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்தார். ஆனாலும் நிதிஷ் குமார் ரெட்டியை காபா டெஸ்டில் சேர்க்க கூடாது என்று வெளிப்படையாகவே தெரிவித்தார். இந்த நிலையில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 191 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து மீட்டெடுத்துள்ளார்.

மெல்போர்னில் போராடி சதம் விளாசிய அவர், இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 6 இன்னிங்ஸில் விளையாடி 284 ரன்களை விளாசியுள்ளதோடு, 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். இதனால் ரசிகர்கள் அனைவரும் அவரை கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை டிரா செய்வதற்கான அத்தனை கதவுகளையும் நிதிஷ் குமார் ரெட்டி திறந்து வைத்துள்ளார். இந்த நிலையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்த இன்னிங்ஸிற்கு பின் நிதிஷ் குமார் ரெட்டியின் ரோல் தெளிவாகிவிட்டது. அவர் நம்பர் 6 பேட்ஸ்மேனாக அடுத்த போட்டியில் களமிறங்க வேண்டும். ஜடேஜா நம்பர் 7லும், அடுத்த 4 வீரர்கள் பவுலர்களாக இருக்க வேண்டும். அப்படி செய்தால், இந்திய அணியின் பேலன்ஸ் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.