சிட்னி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கும் சஞ்சு சாம்சன் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் ஆட்டத்தை காண ஆர்வமாக இருப்பதாக முன்னாள் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். இந்த 2 வீரர்களுமே இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தியதாக கூறிய அவர், 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இந்த ஆட்டத்தை காண்பதற்கு ஆவலுடன் உள்ளதாக கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் விளையாட இருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் டி20 தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் அதற்கு இணையான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏனென்றால் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் இல்லாமல் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி முதல்முறையாக டி20 தொடரில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியாவில் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோருக்கு அதிகளவில் ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். இதனால் இந்திய அணியின் எதிர்கால ஸ்டார் வீரர்களை பார்க்கவும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஆர்வமாக உள்ளது.
இதுதொடர்பாக டேவிட் வார்னர் பேசுகையில், ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டி20 தொடர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஏனென்றால் சஞ்சு சாம்சன் மற்றும் ரிங்கு சிங் இருவரும் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பதற்காக மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிறப்பாக ஆடி இருக்கிறார்கள்.
ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த ஃபினிஷர்களில் ஒருவராக ரிங்கு சிங் உருவாகி இருக்கிறார். அதேபோல் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் இடத்தை நிரப்புவது எளிதல்ல. அதனால் இந்திய கிரிக்கெட்டிலும் இது சுவாரஸ்யமான தருணம். அதேபோல் உலகத்தரம் வாய்ந்த இந்திய வீரர்களை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாட இருப்பதும் ஆர்வமாக உள்ளது.
எம்சிஜி மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இரு நாட்டின் இளம் வீரர்கள் விளையாட உள்ளனர். அதனை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே ஆஸ்திரேலியா அணியின் விளம்பர நிகழ்ச்சிகள் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான தொடருக்கான எதிர்பார்ப்பு உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.