ஹோபர்ட்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியை நேரில் காண்பதற்காக சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் மைதானத்திற்கு வந்துள்ளார். சுப்மன் கில் ஆடிய ஒவ்வொரு பந்துக்கும் சாரா டெண்டுல்கர் பக்கம் கேமராக்கள் திரும்பியது. இதனால் மீண்டும் இவர்களின் காதல் குறித்த விவாதமும் தொடங்கி இருக்கிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி டிம் டேவிட் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோரின் அதிரடியான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது.

இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின் இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய ரசிகர்களின் கவனம் சுப்மன் கில் பக்கம் திரும்பியது. இதனிடையே சுப்மன் கில் எதிர்கொண்ட ஒவ்வொரு பந்திற்கும் கேமரா வேறொரு பக்கம் திரும்பி கொண்டே இருந்தது.
அது வேறு யாரும் அல்ல.. சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் தான். சுப்மன் கில் ஒரு பவுண்டரியை அடித்த போது சாரா பக்கமாக கேமரா திரும்ப, அவர் உற்சாகம் அடைந்தது ஒளிபரப்பப்பட்டது. இதன்பின் சுப்மன் கில் 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் சாரா டெண்டுல்கர் சோகம் அடைந்தார்.
நீண்ட நாட்களாக சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் இடையில் பிரேக் அப் ஆகிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது சுப்மன் கில் - சாரா இணை லண்டனில் சந்தித்துக் கொண்டது. தற்போது ஆஸ்திரேலியாவிலும் சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க சாரா டெண்டுல்கர் நேரில் வந்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் இவர்களின் காதல் குறித்து விவாதம் எழுந்துள்ளது.
கடந்த மாதம் சாரா டெண்டுல்கரின் தம்பியான அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. இதனை சச்சின் டெண்டுல்கரும் உறுதி செய்தார். அப்போதே சாராவின் திருமணம் குறித்த கேள்விகள் எழுந்தன. இதனால் சுப்மன் கில் இன்னும் சில காலம் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்பட்டது. அதன்பின் சாராவும் பல்வேறு தொழில்களை தொடங்கி நடத்தி வருகிறார்.