சிட்னி: இளம் வீரர் சர்ஃபராஸ் கானை இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தூக்கி எறிந்து விட்டதாகவும், அவர் ரன்னே எடுக்க மாட்டார் என கடவுளைப் போல முடிவு செய்து அணியில் சேர்க்கவில்லை என்றும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்து இருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சர்ஃபராஸ் கானுக்கு ஒரு போட்டியில் கூட பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசியாக விளையாடி இருந்தார்.

அதில் ஒரு போட்டியில் 150 ரன்கள் எடுத்தார். ஆனால், அடுத்த போட்டியில் மோசமாக ஆடி அவுட் ஆனார். அவர் பொறுப்பற்ற முறையில் அவுட் ஆனதாக அப்போது விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு ஒரு போட்டியில் கூட பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அவரை அணியில் சேர்க்காததற்கு எந்த விதமான காரணமும் இல்லை. இந்த நிலையில், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அது பற்றி விமர்சித்து இருக்கிறார். அவர் பேசுகையில், "சர்ஃபராஸ் கான் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அபாரமான சாதனைகளை செய்ததால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் மூன்று அரை சதங்களையும், ஒரு 150 ரன்னையும் எடுத்திருக்கிறார்."
"ஆனால் அதற்கு அடுத்த போட்டியில் அவர் மோசமாக ஆட்டம் இழந்தார். அதனால் அவர் ஒட்டுமொத்தமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். இது சரி என்று எனக்குத் தோன்றவில்லை. ஆஸ்திரேலியா பிட்ச்-களில் சர்ஃபராஸ் கான் வெற்றிகரமாக விளையாட மாட்டார் என்று நீங்கள் நினைத்தாலும், ஒருவேளை அவர் ரன் எடுத்து விட்டால் என்ன செய்வது? அவர் தேர்டு மேன் திசையில் தான் பொதுவாகவே ரன் சேர்க்கிறார். அதை பயன்படுத்தி இருந்தால் என்ன செய்வீர்கள்?"
"அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக எப்படி விளையாடினார் என்பதை மட்டும் வைத்து நாம் முடிவுக்கு வர முடியாது. எனவே நாம் கடவுளைப் போல அவரால் ரன் குவிக்க முடியாது. எனவே, அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என முடிவு செய்யக் கூடாது. இளம் வீரர்கள் முக்கியமான போட்டிகளில் எப்படி தங்களை தயார் செய்து கொள்வார்கள் என்பதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும். ரன் குவிக்கும் வீரர்களுக்கு நாம் வாய்ப்பு அளிக்க வேண்டும்." என்றார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.